ஜனநாயகன் படம் தொடர்பாக தாக்கல் செய்த ரிட் மனுவை திரும்ப பெறுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் கடிதம் சமர்ப்பித்துள்ளது.
நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் வெளியாவதில் சிக்கல் நீடித்து வருகிறது. ஒரு மாதத்திற்கு முன்பாக ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் வெளியீடாக வெளியாக வேண்டிய ஜனநாயகன், சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் வெளியாகவில்லை.
இதனால் மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி.ஆஷா, தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.
ஆனால் தங்கள் தரப்புக்கு வாதம் முன்வைக்க போதுமான அவகாசம் கொடுக்காமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்து தணிக்கை வாரியம் தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்தது.
இதை விசாரித்த தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள்முருகன் தணிக்கை வாரியத்துக்கு போதுமான கால அவகாசம் வழங்கி, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிபதி பி.டி.ஆஷாவுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.
ஆனால் இதுவரை வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன் வரவில்லை.
இந்தசூழலில் தங்கள் மனுவை திரும்ப பெறுவதாக கேவிஎன் புரொடக்ஷன் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடிதம் சமர்ப்பித்துள்ளது.
வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் அளித்த கடிதத்தில், “சென்சார் வாரியத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவைத் திரும்பப் பெறுகிறோம். மறுஆய்வுக் குழுவை அணுக முடிவு செய்துள்ளதால், இந்த வழக்கை தொடர விரும்பவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவைத் திரும்பப் பெறுவது குறித்த விசாரணை, நீதிபதி பி.டி. ஆஷா முன்னிலையில் நாளை பிப்ரவரி 10 விசாரணைக்கு வருகிறது.
