ஜனநாயகன் படம் தொடர்பான வழக்கு இன்று (ஜனவரி 15) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
ஜனநாயகன் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மத்திய தணிக்கை வாரியம் இந்த படத்துக்கு தணிக்கை சான்றிதழை வழங்கவில்லை.
இதனால் திட்டமிட்டப்படி படம் வெளியாகவில்லை. ரிலீஸ் தேதியை ஒத்திவைத்துள்ள தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
முதலில் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த தலைமை நீதிபதி ஸ்ரீ வஸ்தவா மற்றும அருள்முருகன் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்து வழக்கு விசாரணையை ஜனவரி 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மேல்முறையீடு செய்தது. இந்த மனு நீதிபதி ஏ.ஜி.மாஷி முன் வரும் ஜனவரி 19ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தசூழலில் ஜனநாயகன் படத்துக்கு சென்சார் வழங்காத மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் மற்றும் அதன் மண்டல அதிகாரிக்கு எதிராக கேவிஎன் புரொடக்ஷன் தாக்கல் செய்த மனு இன்று (ஜனவரி 15) நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் ஏ.ஜி.மாஷி அமர்வு விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் மனுவை விசாரிக்கவுள்ளனர்.
இதனால் ஜனநாயகன் ரிலீஸ் குறித்த எதிர்ப்பார்ப்பு மீண்டும் எழுந்துள்ளது.
