ஜாக்டோ ஜியோ விஜய்யை சந்திக்கவில்லையா? – ஒருங்கிணைப்பாளர் மாயவன் விளக்கம்!

Published On:

| By vanangamudi

கடந்த ஜூன் 13-ஆம் தேதி சென்னையை அடுத்த பனையூரில் ஜாக்டோ ஜியோ சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன் (உயர்நிலை – மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் தலைவர்) தலைமையிலான குழுவினர் தவெக தலைவர் விஜய்யை சந்தித்தனர்.

இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாயவன், “தமிழக அரசு நான்கரை ஆண்டுகளாக அரசு ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை 8 முறை சந்தித்துவிட்டோம். தமிழக அரசை நம்பி நாங்கள் ஏமாந்துவிட்டோம்” என்று தெரிவித்தார். Jacto geo coordinates mayavan clarifies

இந்தநிலையில், தவெக தலைவர் விஜய்யை தங்களது நிர்வாகிகள் சந்தித்து பேசியதாக வெளியான செய்திக்கு ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மறுப்பு தெரிவித்து ஜூன் 15-ஆம் தேதி அறிக்கை வெளியிட்டனர். இதுதொடர்பாக ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்ட அறிக்கையில்,

“ஜாக்டோ – ஜியோ அமைப்பு தமிழ்நாட்டில் அரசு ஊழியர், ஆசிரியர், அரசுப்பணியாளர்களின் கோரிக்கைகளுக்காக கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து போராடிவருகின்ற அமைப்பாகும்.

அப்படிப்பட்ட கோரிக்கைகளுக்காக எந்த ஆட்சியாக இருந்தாலும் சமரசமற்ற முறையில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி ஊதிய மாற்றம், பறிக்கப்பட்ட உரிமைகள் மீளப் பெறப்பட்டது உள்ளிட்ட கோரிக்கைகளை வென்றெடுத்துள்ளது.

இன்றைக்கும் பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக மத்திய, மாநில அரசுகளிடம் தொடர்ந்து போராடி வருகிறது.

தமிழ்நாடு அரசிடம் ஜாக்டோ – ஜியோ சார்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியும், பல்வேறு கட்ட போராட்ட நடவடிக்கைகள் விளைவாகவும் அரசிடமிருந்து சரண்டர், மகப்பேறு விடுப்பு பணிவரன்முறைக்கு சேர்ப்பது உள்ளிட்ட 9 கோரிக்கைகள் பெற்றுள்ளோம்.

மேலும், பழைய ஓய்வூதியத்திற்காக அமைக்கப்பட்ட குழு அறிக்கை 30.09.2025 க்குள் பெறப்படும் என உத்திரவாதம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, அரசிடமிருந்து நல்ல முடிவுகள் வரும் என்று எதிர்பார்த்து தற்காலிகமாக இயக்க நடவடிக்கைகளை ஒத்திவைத்துள்ளோம். ஜாக்டோ – ஜியோ அமைப்பு அரசு ஊழியர், ஆசிரியர், அரசுப்பணியாளர் அமைப்புகள் சார்பாக பல்வேறு சங்கங்கள் கொண்ட கூட்டமைப்பாகும்.

இதில் பங்கேற்றுள்ள அந்தந்த சங்கங்களின் மாநில அமைப்புகளின் முடிவுகளுக்கேற்ப தனித்துவமாக செயல்படுவது அந்தந்த சங்கங்களின் தனிப்பட்ட முடிவாகும். அதற்கும் ஜாக்டோ – ஜியோவிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

எனவே, ஜாக்டோ ஜியோ சார்பாக தவெக தலைவர் விஜய்யை சந்தித்ததாக வெளியான தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. அதற்கும் ஜாக்டோ- ஜியோவிற்கும் எவ்வித சம்பந்ததமும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


இதுதொடர்பாக, ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன் மின்னம்பலத்திடம் பேசியபோது,

“மேல்நிலை, உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் அரசு ஊழியர்கள் பிரச்சனை தொடர்பாக விஜய்யை சந்தித்து ஆதரவு கேட்பதாக முடிவு செய்திருந்தோம்.

அதனடிப்படையில், விஜய்யை சந்தித்து ஆதரவு கேட்டோம். அவரும் அரசு ஊழியர்களின் நலனுக்கு உறுதுணையாக இருப்போம் என்று உத்தரவாதம் கொடுத்தார். ஜாக்டோ ஜியோ என்ற அமைப்பில் நானும் ஒரு ஒருங்கிணைப்பாளர் தான்” என்று தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் மணிமேகலை நம்மிடம் பேசியபோது, “இந்த அறிக்கையை யார் வெளியிட்டார்கள் என்று தெரியவில்லை. நானும் ஒவ்வொரு நிர்வாகியிடமும் விசாரித்து வருகிறேன்” என்று தெரிவித்தார். Jacto geo coordinates mayavan clarifies

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share