இஸ்ரேல்- அமெரிக்காவின் கூட்டுத் தாக்குதலில் ஈரானின் அதி உச்ச தலைவரான கமெனி (காமெனி கமேனி) கொல்லப்பட்டுள்ள நிலையில் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் லெபனான் நாட்டில் 31 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
லெபனாலில் ஈரான் ஆதரவு பெற்ற ஹில்புல்லா அமைப்பின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை ஏவுகணைத் தாக்குதல் நடத்தி உள்ளது. லெபனான் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 31 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 149 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஹிஸ்புல்லா அமைப்பின் ஏவுகணைத் தளங்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகளை அழிப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என இஸ்ரேல் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. தாக்குதல் தொடர்பான காணொளி ஆதாரங்களையும் இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் ஹிஸ்புல்லா அமைப்பும் வடக்கு இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து ஏவுகணைகள் ஏவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் எல்லைப் பகுதிகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு தரப்பினருக்கும் இடையே மோதல் மேலும் தீவிரமாவது குறித்த அச்சம் நிலவுகிறது.
கடந்த மூன்று நாட்களாக வளைகுடா நாடுகள், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகியவற்றுக்கு இடையே நிலவி வரும் மோதல் போக்கு தற்போது தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போர் தற்போது லெபனான் எல்லை வழியாக தீவிரமடைய தொடங்கியுள்ளது. இது சர்வதேச சமூகத்தை கவலையடையச் செய்துள்ளது.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை
தெற்கு லெபனான் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருவதாக உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நிலைமை தொடர்ந்து பதற்றமாக உள்ளதால், மேலும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே குவைத் அமெரிக்க தூதரகம் அருகே ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தூதரகம் அருகே தீ பற்றி எரிவதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மேலும் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதால் அச்சுறுத்தல் தொடர்வதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
