தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றப்படுகிறாரா? என்கிற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான பேசுபொருளாகி இருக்கிறது.
மேற்கு வங்க மாநில ஆளுநராக இருந்த சி.வி. ஆனந்த போஸ் திடீரென இன்று மார்ச் 5-ந் தேதி தமது பதவியை ராஜினாமா செய்தார். மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில் சி.வி. ஆனந்த போஸ் ராஜினாமா செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தம்மிடம் தெரிவித்ததாக அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி கூறியுள்ளார். மாநில முதல்வரைக் கலந்து ஆலோசிக்காமல் மாநிலத்தின் ஆளுநரை மத்திய அரசு நியமிக்கும் முடிவுக்கு மமதா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி தற்போது பதவி வகித்து வருகிறார். மமதா பானர்ஜியிடம் அமித்ஷா கூறியிருப்பதால், மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட இருக்கிறார்.
இதனால் தமிழ்நாட்டில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி. மாற்றப்படுகிறாரா? என்பது தெளிவாகவில்லை.
தமிழ்நாடு பொறுப்பு ஆளுநராக 2016 முதல் 2017 வரை இருந்த வித்யாசகர் ராவ், அப்போது மகாராஷ்டிரா ஆளுநராகவும் இருந்தார். அதேபோல தற்போது ஆர்.என்.ரவி தமிழ்நாட்டுடன் கூடுதல் பொறுப்பாக மேற்கு வங்க ஆளுநராகவும் இருப்பாரா? என்பதும் தெளிவாகவில்லை.
இதனிடையே, தமிழ்நாட்டுக்கு புதிய ஆளுநரை நியமிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
நாகாலாந்து ஆளுநராக ஆர்.என்.ரவி பதவி வகித்த நிலையில் அங்கு மிகக் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டார். இதனால் 2021-ம் ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி தமிழ்நாட்டின் 26-வது ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார். தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருவதாக உச்சநீதிமன்றத்தின் கடும் அதிருப்திக்கும் உள்ளானவர் ஆளுநர் ஆர்.என்.ரவி.
