போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் போலீசார் இன்று (ஜூன் 24) சம்மன் அளித்துள்ளனர். is krishna get arrested after srikanth in drug case?
தமிழ் திரையுலகில் 2002ஆம் ஆண்டு வெளிவந்த ’ரோஜா கூட்டம்’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் ஸ்ரீகாந்த். ஒருகட்டத்தில் அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவிய நிலையில் சிறிய பட்ஜெட் படங்களிலும், துணைக் கதாபாத்திரங்களிலும் அவர் நடித்து வந்தார்.
இந்த நிலையில் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் சென்னை நுங்கம்பாக்கம் போலீசாரால் நேற்று அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஸ்ரீகாந்த் மீது NDPS 8C (தடைசெய்யப்பட்ட போதைப்பொருளை தொடர்ந்து பயன்படுத்தியதோ அதை சேமித்து வைத்திருந்த குற்றம்), NDPS 22B (மிகக்குறைந்த அளவை தாண்டியும், வணிக ரீதியான அளவிற்கு உட்பட்ட அளவிலும் போதைப்பொருளை கையில் வைத்திருப்பது), NDPS 29 (1) – (குற்றச்செயலில் பங்கு பெறுபவர்) ஆகிய முக்கிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், “அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் கைதானதற்கு முன்புதான் அவரிடம் 250 கிராம் கொக்கைன் பாக்கெட் வாங்கினேன். அதை வைத்து கடந்த சனிக்கிழமை இரவு நுங்கம்பாக்கம் வீட்டில் கொக்கைன் பார்ட்டி நடத்தினேன். எனக்கு பிரசாத் மட்டுமே தெரியும். அவர் என்னை வைத்து ’தீங்கிரை’ என்ற படம் தயாரித்துள்ளார். அதில் எனக்கு ரூ.10 லட்சம் தரவேண்டும். அதனை கேட்கும் போது கொக்கைன் போதைப்பொருள் கொடுத்து பழக்கத்தை ஏற்படுத்தினார். பணம் கேட்கும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் அவர் கொக்கைன் கொடுத்தது, எனக்கு பழக்கத்தை அதிகப்படுத்தியது. 3 முறை பயன்படுத்திய பின்பு நானே கேட்கும் அளவுக்கு அடிமையானேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது போனை பறிமுதல் செய்து அவரின் ஜிபே பரிவர்த்தனையை ஆய்வு செய்ததில், ஜிபே மூலம் ரூ.4.72 லட்சம் வரை பணம் அனுப்பி 40 முறை கொக்கைன் போதைப்பொருளை ஸ்ரீகாந்த் வாங்கியது உறுதியானது.
இதனையடுத்து தமிழ் திரையுலகத்தைச் சேர்ந்த நடிகர், நடிகைகளில் யார் யாருக்கு போதைப் பொருள் பழக்கம் இருக்கிறது? யாருக்கெல்லாம் வழங்கியிருக்கிறார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அதன் அடிப்படையில் கழுகு, அலி பாபா, பண்டிகை உள்ளிட்ட படங்களில் நடித்த கிருஷ்ணாவை விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அவருக்கு நுங்கம்பாக்கம் போலீசார் தரப்பில் இன்று சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் கிருஷ்ணா தற்போது கேரளாவில் படப்பிடிப்புக்காக சென்றுள்ளதால், விரைவில் போலீஸ் விசாரணைக்கு ஆஜராவார் என்றும், அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் கிருஷ்ணா அஜித் குமாரை வைத்து பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தனின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.