கேரள மாநிலம் பாலக்காட்டில் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 29) பிற்பகல் கோவை வருகிறார். பிரதமரை வரவேற்கும் தலைவர்கள் பட்டியலில் அண்ணாமலை பெயர் இல்லாதது பேசுபொருளாகி உள்ளது.
கேரள சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அங்கு நடைபெறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். டெல்லியிலிருந்து கோவை வந்த பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பாலக்காடு செல்கிறார்.
பிற்பகல் 2 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடையும் பிரதமர் மோடியை வரவேற்க, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும் எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் விமான நிலையத்துக்கு வந்துள்ளனர். கூட்டணிக் கட்சியான அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் விமான நிலையத்துக்கு வந்திருந்தார்.
பாஜக முக்கிய தலைவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பிரதமரை வரவேற்க விமான நிலையத்துக்கு வந்துள்ள நிலையில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் தனது இல்லத்தில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.கோவை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்கும் தலைவர்கள் பட்டியலில் அண்ணாமலை பெயர் இல்லாதது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே கோவை மாவட்டத்தில் போட்டியிடும் நோக்கில் தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டி வந்த அண்ணாமலை கோவை வடக்கு தொகுதி மட்டும் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அதிருப்தியில் இருப்பதாகவும் அவர் போட்டியிட வில்லை என்று தலைமையிடம் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் பிரதமரை வரவேற்கும் பட்டியலில் அவரது பெயர் இல்லாதது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது.
