நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய உறுதியானதாக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசார் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. Is actor Srikanth being arrested for using drugs
தமிழ் சினிமாவில் ‘ரோஜாக்கூட்டம்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். எனினும் நீண்ட காலமாக அவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வருகின்றன.
இந்த நிலையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக போலீசாரின் விசாரணைக்குள் சிக்கியுள்ளார்.
கடந்த மாதம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மதுபான விடுதியில் அடிதடியில் ஈடுபட்டதாக அதிமுக ஐடி விங் நிர்வாகிகளான மயிலாப்பூரைச் சேர்ந்த பிரசாத், அஜய் வாண்டையார், மற்றும் பிரபல ரவுடி சுனாமி சேதுபதி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
அதன்பின்னர் பிரசாத் மீது அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்தார் என்றும், போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும் புகார்கள் குவிந்தன. இது தொடர்பாக நுங்கம்பாக்கம், மயிலாப்பூர் ஆகிய காவல் நிலையங்களில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதற்கிடையே மோசடியில் ஈடுபட்ட வழக்கில் கைதான அதிமுக ஐ.டி விங் நிர்வாகி பிரசாத்தை கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்தார்.
தொடர்ந்து அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் மற்றும் கொக்கைன் சப்ளை வழக்கில் கைதான பிரதீப் குமார் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது நடிகர் ஸ்ரீகாந்துக்கு போதைப்பொருளை சப்ளை செய்ததாக போலீஸ் விசாரணையில் அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, நடிகர் ஸ்ரீகாந்திடம் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவருக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவர் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதியானதாக போலீசார் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.