ஈரானில் நடந்து வரும் மோதல் வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்படும் பணம் (remittances) குறையும் சூழல் உருவாகியுள்ளது. ஈரானுன் நடந்து வரும் போர், இப்பகுதியில் வர்த்தகம் மற்றும் பயண நடவடிக்கைகளை கடுமையாக சீர்குலைத்து வருவதால், வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா ஆண்டுதோறும் பெறும் பில்லியன் கணக்கான டாலர்கள் பண அனுப்புதல் (remittances) பாதிக்கப்படலாம். இது, இந்தப் பண அனுப்புதலை பெரிதும் நம்பியுள்ள கேரளா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களின் பொருளாதாரங்களை பாதிக்கலாம்.
வணிக நடவடிக்கைகள் தற்போது நிலையானதாக இருந்தாலும், இந்த மோதல் நீண்ட காலத்திற்கு தொடர்ந்தால் அது தொழிலாளர்களுக்கு வேலை இழப்புக்கும், நிபுணர்களுக்கு வருவாய் குறைவதற்கும் வழிவகுக்கும். ஈரானால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீதான தாக்குதல் அச்சுறுத்தல்கள் புதுப்பிக்கப்பட்ட நிலையில், சில நிபுணர்கள் தங்கள் நாடுகளுக்குத் திரும்பி வருகின்றனர். மேலும் பல நிறுவனங்கள் தொலைதூர வேலைக்கு மாறி வருகின்றன. இந்த மோதல் நீடித்தால் இந்தியாவுக்கு அனுப்பும் பணம் பாதிக்கப்படலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) சமீபத்திய தரவுகளின்படி, 2023-24ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த பண அனுப்புதலில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானவை வளைகுடா நாடுகளிலிருந்து வந்தவை ஆகும். மொத்தம் ரூ. 3.74 லட்சம் கோடி (40 பில்லியன் டாலர்). இதில் UAE, சவுதி அரேபியா, கத்தார், குவைத் மற்றும் ஓமன் போன்ற நாடுகளும் அடங்கும். UAE-ல் அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் உள்ளனர். 2024 நிதியாண்டில், இந்தியாவிற்கு பணம் அனுப்புவதில் ஐக்கிய அரபு அமீரகம் இரண்டாவது பெரிய நாடாக இருந்தது. இது தோராயமாக 19.2% ஆகும்.
மேலும், அனைத்து வளைகுடா நாடுகளையும் இணைத்துப் பார்க்கும்போது, இந்தியாவின் மொத்த பணம் அனுப்புதலில் அவற்றின் பங்கு தோராயமாக 38% ஆகும். உலக வங்கி தரவுகளின்படி, 2025 நிதியாண்டில் இந்தியாவிற்கு பணம் அனுப்புவது 15% அதிகரித்து 138 பில்லியன் டாலராக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது 2024 நிதியாண்டில் 119 பில்லியன் டாலராக இருந்தது.
கேரளாவுக்கு பெரிய பாதிப்பு:
வளைகுடா நாடுகளில் இருந்து பணம் அனுப்புவதை அதிகம் நம்பியுள்ள மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. மாநிலத்தின் வெளிநாட்டு இந்தியர்களில் (NRI) கிட்டத்தட்ட 80% பேர் வளைகுடாவில் வாழ்கின்றனர். இந்தியாவிற்கு அனுப்பும் மொத்த பணத்தில் கேரளாவின் பங்கு 19.7% அல்லது தோராயமாக ரூ. 1.94 லட்சம் கோடி ஆகும். இது நாட்டின் மொத்த பணத்தில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கைக் குறிக்கிறது. வளைகுடா நாடுகளில் கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் பணிபுரியும் கேரளப் பகுதிகள் இந்த அழுத்தத்தின் தாக்கத்தை உணர வாய்ப்புள்ளது.
