இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்தை அறிவித்தது ஈரான்!

Published On:

| By Minnambalam Desk

Iran Cease Fire

இஸ்ரேலுடனான 12 நாட்கள் மோதல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வந்ததாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேல் இது தொடர்பாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. Iran Announces Ceasefire with Israel!
ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல்கள் கடந்த 12 நாட்களாக தொடர்ந்து நீடித்து வந்தன. ஈரானின் தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட பெரும்பாலான மாகாணங்கள் மீது இஸ்ரேல் குண்டு மழை பொழிந்தது. இன்று அதிகாலையிலும் ஈரான் மீது 5 முறை இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேலின் இந்த மூர்க்கமான தாக்குதலில் ஈரானின் புரட்சி காவல்படை தளபதிகள், அணு விஞ்ஞானிகள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இஸ்ரேலுக்கு பதிலடி தரும் வகையில் ஈரானும் ஏவுகணைகள், டிரோன்களுடன் கொத்து குண்டுகளையும் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்கள் மீது சரமாரியாக வீசின. இதில் இஸ்ரேல் நகரங்கள் கடுமையாக உருக்குலைந்தன.

இதனிடையே இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்காவும் ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தின. அமெரிக்காவுக்கு பதிலடி தரும் வகையில் கத்தார் நாட்டில் உள்ள அமெரிக்காவின் விமான படை தளத்தை தாக்கியது ஈரான். ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்காவின் ராணுவ நிலைகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின.

இஸ்ரேல்- ஈரான் யுத்தத்தில் அமெரிக்காவும் இணைந்ததால் ஓமன் உள்ளிட்ட நாடுகள் ஈரான் பக்கம் அணிவகுத்தன. இதனால் உலகப் போர் மூளும் நிலைமை உருவானது.

இந்த நிலையில் இஸ்ரேல்- ஈரான் இடையேயான 12 நாட்கள் யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது; இருதரப்பும் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளன என அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரென அறிவித்தார். இதனை உடனே மறுத்த ஈரான், போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என விளக்கம் அளித்தது.

இந்த நிலையில் ஈரான் தற்போது யுத்த நிறுத்தம் முழுமையாக அமலுக்கு வந்துவிட்டதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சி மூலம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில் இதுவரை இஸ்ரேல், போர் நிறுத்தம் தொடர்பாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share