இந்திய ராணுவத்தில் சேரத் துடிக்கும் இளைஞர்களுக்கு ஒரு மிக முக்கியமான மற்றும் அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது. மத்திய அரசின் லட்சியத் திட்டமான ‘அக்னிபாத்’ (Agnipath Scheme) மூலம் ராணுவத்தில் இணையவிருக்கும் ‘அக்னிவீர்கள்’, தங்களது பணிக்காலத்தில் திருமணம் செய்துகொள்ளக் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் தகவல் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளின்படி, இந்திய ராணுவம் இந்தத் திருமணத் தடையை (Marriage Ban) ஒரு விதியாகவே நடைமுறைப்படுத்தியுள்ளது.
புதிய விதி என்ன சொல்கிறது? இந்திய ராணுவத்தின் புதிய அறிவிப்பின்படி, அக்னிவீர்களாகத் தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள், அவர்கள் பணியில் நிரந்தரம் செய்யப்படும் வரை (Until their permanent appointment) திருமணம் செய்துகொள்ளக் கூடாது.
- அக்னிபாத் திட்டத்தின் கீழ் ஒரு வீரர் 4 ஆண்டுகள் பணியில் இருப்பார்.
- இந்த 4 ஆண்டுகள் முடிந்து, அவர் நிரந்தரப் பணிக்கு (Permanent Commission) தேர்வு செய்யப்படும் வரை அவர் பிரம்மச்சாரியாகவே இருக்க வேண்டும்.
ஏன் இந்த அதிரடி முடிவு? வழக்கமாக ராணுவத்தில் அதிகாரி நிலைக்குப் (Officer Rank) பயிற்சி பெறும் கேடட்களுக்கு (Cadets) பயிற்சி முடியும் வரை திருமணம் செய்ய அனுமதி இருக்காது. ஆனால், இப்போது அக்னிவீர்களுக்கும் இது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்குச் சொல்லப்படும் முக்கியக் காரணங்கள்:
- கவனச் சிதறல்: ராணுவப் பயிற்சி மற்றும் ஆரம்பக்காலப் பணி என்பது மிகுந்த மன உறுதியையும், 24 மணி நேரமும் அர்ப்பணிப்பையும் கோருவது. குடும்பப் பொறுப்புகள் இருந்தால், வீரர்களின் கவனம் சிதறக்கூடும்.
- ஒழுக்கம் மற்றும் பயிற்சி: அக்னிவீர்களைக் கூர்மைப்படுத்தவும், அவர்களை முழுமையான போர் வீரர்களாக மாற்றவும் இந்தத் தனிமை அவசியம் என்று ராணுவம் கருதுகிறது.
மீறினால் என்ன நடக்கும்? பயிற்சியில் சேரும்போதே “நான் திருமணமாகாதவன்” என்று சான்றிதழ் அளிக்க வேண்டும். ஒருவேளை பணியில் இருக்கும் அந்த 4 ஆண்டுகளுக்குள் யாரேனும் ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டால், அது ராணுவ விதிகளின்படி ஒழுங்கீனமாகக் கருதப்படும். அப்படிச் செய்பவர்கள் உடனடியாகப் பணியிலிருந்து நீக்கப்படலாம் (Dismissal) மற்றும் அவர்கள் அக்னிவீர் திட்டத்தின் சலுகைகளை இழக்க நேரிடும்.
இளைஞர்களின் நிலை: ராணுவத்தில் சேரும் கனவோடு இருக்கும் 17.5 வயது முதல் 21 வயது வரையிலான இளைஞர்களுக்கு இது ஒரு சவாலான விதிமுறைதான். 4 ஆண்டுகள் முடிந்து, அதில் 25% பேர் மட்டுமே நிரந்தரமாக்கப்படுவார்கள். மீதமுள்ளவர்கள் வெளியேறும்போது அவர்களுக்குத் திருமண வயது வந்திருக்கும். எனவே, ராணுவச் சீருடை அணிய விரும்பும் இளைஞர்கள், இனி திருமண ஆசைக்குச் சில காலம் ‘லீவு’ விட்டுவிட்டுத் தான் லட்சியத்தை நோக்கி ஓட வேண்டும்!
