இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போரை தாமே நிறுத்தியதாக 50-வது முறையாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பொதுமக்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தினர். இதில் 26 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர்.
இதற்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது இந்திய ராணுவம். இதனால் இரு நாடுகளிடையே போர் பதற்றம் உருவானது.
அத்தகைய சூழலில், இந்தியா- பாகிஸ்தான் இடையேயான யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டேன்; இரு நாடுகளையும் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தங்களின் பெயரால் மிரட்டி யுத்த நிறுத்தம் மேற்கொள்ள வைத்தேன் என டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இதேபோல இந்தியாவும் பாகிஸ்தான் மீதான ராணுவ நடவடிக்கையை நிறுத்தியது.
இதன் பின்னர் டொனால்ட் டிரம்ப் தற்போது 50-வது முறையாக, இந்தியா- பாகிஸ்தான் போரை தாமே தலையிட்டு நிறுத்தியதாக கூறியுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஐ.நா. சபை கூட்டத்தில் பேசிய டிரம்ப், “வெறும் 7 மாதங்களில் முடிவுக்கே வராத 7 போர்களை நிறுத்தி இருக்கிறேன். ஒரு போர் 31 ஆண்டுகளாக நீடித்து கொண்டிருந்தது; மற்றொன்று 36 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருந்தது; இந்த யுத்தங்கள் மூலம் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்; இதனை தடுத்து நிறுத்தி இருக்கிறேன்” என்றார். மத்திய அரசு ஏற்கனவே டிரம்ப்பின் இந்த கருத்தை நிராகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் போர்களை முடிவுக்கு கொண்டு வருவதில் தமக்கு ஐநா அமைப்பு உதவவில்லை என்றும் டிரம்ப் குற்றம்சாட்டினார்.