இந்தியாவில் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி முதல் நவம்பர் 27ஆம் தேதி வரை ஆடவர் செஸ் உலகக் கோப்பை போட்டிகள் நடத்தப்படும் என்று உலக செஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. India going to host chess worldcup for the firsttime
உலகக்கோப்பை மகளிர் செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள படுமி நகரில் கடந்த 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் வைசாலி ரமேஷ்பாபு சீனா வீராங்கனை சோங்கியிடம் போராடி தோல்வியை தழுவினார்.
இந்தியாவின் மற்ற முன்னணி வீராங்கனைகளான கொனேரு ஹம்பி, திவ்யா தேஷ்முக் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளனர்.

இந்த மகிழ்ச்சியான செய்திக்கு நடுவே உலகக் கோப்பை ஆடவர் செஸ் போட்டிகள் இந்த வருடம் இந்தியாவில் நடைபெறும் என உலக செஸ் கூட்டமைப்பு (FIDE) அறிவித்துள்ளது. 139 ஆண்டுகால செஸ் உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியாவில் இப்போட்டி நடத்தப்படுவது இதுவே முதல்முறை.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை செஸ் உலகக்கோப்பை போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2025 ஆண்டுக்கான உலகக் கோப்பை போட்டி தொடர், இந்தியாவில் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி முதல் நவம்பர் 27 ஆம் தேதி வரை ஆடவர் செஸ் உலகக் கோப்பை போட்டிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உலக நாடுகளை சேர்ந்த 206 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
இந்தியாவின் சார்பில் 2025 உலக செஸ் உலகக் கோப்பை தொடருக்கு இந்தியாவை சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி, அரவிந்த சிதம்பரம் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
இதுதொடர்பாக உலக செஸ் கூட்டமைப்பின் செயல் தலைவர் எமில் சுடோவ்ஸ்கை கூறுகையில், “செஸ் விளையாட்டில் அதிக ஆர்வமும், ஆதரவும் அளிக்கக் கூடிய இந்திய நாட்டில் இம்முறை செஸ் உலகக் கோப்பை நடத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்திய செஸ் ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் உள்ளனர். இந்தியாவில் எந்தெந்த நகரங்களில் செஸ் உலகக் கோப்பை நடைபெறும் என்ற தகவல் விரைவில் தெரிவிக்கப்படும்.” என்றார்.
கடந்த 2023-இல் அசர்பைஜானில் நடைபெற்ற செஸ் உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் மேக்னஸ் கார்ல்சன் பிரக்ஞானந்தாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்த நிலையில் சொந்த நாட்டில் நடைபெறும் ஆட்டத்தில் மீண்டும் இந்திய வீரர்கள் சாம்பியன் பட்டம் வெல்வார்களா என்ற ஆர்வம் எழுந்துள்ளது.