இந்தியா கூட்டணிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்க வேண்டும் என்ற மணி சங்கர் அய்யரின் கருத்துக்கு விசிக தலைவர் திருமாவளவன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
பாஜக தலைமையிலான என்.டி.ஏ-வை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை அமைத்தன.
இந்த கூட்டணியின் தலைவராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளார்.
இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மணி சங்கர் அய்யர் ஏ.என்.ஐ ஊடகத்திடம் கூறுகையில், “’இந்தியா’ கூட்டணியை வ லுப்படுத்தவும், ஒருங்கிணைக்கவும் மிகச் சரியான நபர் மு.க.ஸ்டாலின். ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்குமாறு காமராஜரிடம் கேட்டபோது, அவர் அதைக் கேட்ட அனைவரிடமும் ஒரே ஒரு வாக்கியத்தைச் சொன்னார் – “ஆங்கிலம் தெரியாது, இந்தி தெரியாது… பிறகு எப்படி (பிரதமர் ஆவது)?” என்று கேட்டார்.
இப்போது மு.க.ஸ்டாலினும் அதே நிலையில் தான் இருக்கிறார். ‘இந்தியா’ கூட்டணியை ஒருங்கிணைப்பதற்காக யாராவது ஒரு நபர் முழு நேரத்தையும் செலவிட முன்வந்தால், ராகுல் காந்தி இந்தியாவின் பிரதமர் ஆக முடியும். அந்த ஒருங்கிணைப்புப் பணியைச் செய்ய ஸ்டாலின் தான் பொருத்தமானவர்” என்று தெரிவித்திருந்தார்.
மணி சங்கர் அய்யரை தொடர்ந்து உத்தவ் தாக்ரேவின் சிவசேனா கட்சியும் இதே கருத்தை தெரிவித்துள்ளது.
இந்தியா கூட்டணிக்கு தேசிய அளவில் மு.க.ஸ்டாலின் அல்லது மம்தா பானர்ஜியை தலைவராக்க வேண்டும் என்று உத்தவ் தாக்ரே சிவசேனா கட்சியின் ‘சாம்னா’ நாளிதழ் தலையங்கம் எழுதியுள்ளது.
இந்நிலையில் இன்று (பிப்ரவரி 18) திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளனிடம் மணி சங்கர் அய்யரின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் கூறிய கருத்து வரவேற்க வேண்டியது. அவர் முன்மொழிந்ததை நான் வழிமொழிகிறேன்” என்றார்.
