வருமான வரித்துறை நோட்டீஸுக்கு எதிராக விஜய் தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக உள்ளது.
2016 -17 நிதியாண்டில் நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் வருமானவரி தாக்கலின் போது 35.42 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதாக தெரிவித்திருந்தார்.
இதற்கான மதிப்பீட்டு நடவடிக்கையை வருமானவரித்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு விஜய் தொடர்புடைய இடங்களில் சோதனை செய்தபோது கைப்பற்ற ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்ததில் 15 கோடி ரூபாய் வருமானத்தை விஜய் கணக்கில் காட்டவில்லை என்று கண்டறியப்பட்டது.
எனவே வருமானத்தை மறைத்ததற்காக விஜய்க்கு 1.50 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
2022 ஜூன் 30-ம் தேதி பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் வருமானவரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்திருந்தது.
இந்த வழக்கில், நடிகர் விஜய்க்கு ஆபிரகாம் செலுத்த கோரி 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன்னதாகவே உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். ஆனால் கால வரம்பை மீறி வருமானவரித்துறை 2022 ஆம் ஆண்டு நோட்டீஸ் வழங்கியது. இதனால் அந்த அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும் என்று வாதம் முன்வைக்கப்பட்டது.
வருமானவரித்துறை சார்பில், சட்டப்பிரிவு 271 AAB(1) படி தான் விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டது. எனவே அவரது மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி செந்தில்குமார் ஒத்தி வைத்திருந்தார்.
இந்த நிலையில் நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கில் நீதிபதி செந்தில்குமார் நாளை காலை 10:30 மணிக்கு தீர்ப்பு வழங்குவார் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
