நான் உருவாக்கிய பாமகவில் இருந்து என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளுகிறார்களே.. ராமதாஸ் வேதனை

Published On:

| By Minnambalam Desk

Ramadoss Press Meet

தாம் உருவாக்கிய பாமகவில் இருந்து என்னை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகின்றனர் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேதனை தெரிவித்தார். Ramadoss Expresses Deep Anguish

திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் இன்று ஜூன் 12-ந் தேதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: 46 ஆண்டுகள் உழைத்து உருவாக்கி, கட்சியை கட்டிக் காப்பாற்றி இருக்கிறேன். இன்னும் ஓரிரு ஆண்டுகள் தலைமை ஏற்க உரிமை இல்லையா? எனக்கு உரிமை இல்லையா? என்று கேட்பதே எனக்கு அவமானமாக இருக்கிறது.

கழுத்தை பிடித்து வெளியே தள்ளுகிறார்களே

ஒவ்வொரு செங்கல்லாகப் பார்த்து பார்த்து கட்டிய பாமக என்ற மாளிகையை நான் குடியமர்த்தியவரே, என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளுகிற அளவுக்கு அவருடைய செயல்பாடுகள் இருந்தன; இருக்கின்றன.

மானபங்கம் செய்த அன்புமணி

மாவட்ட செயலாளர்கள் வருகையைத் தடுத்து நிறுத்தி அவரே செல்பேசியில் (அன்புமணி) பேசி என்னை மானபங்கம் செய்துவிட்டனர்.

அதிகாரம் தானாக வந்திருக்குமே

அன்பு அமைதி காத்திருந்தால், அதிகாரம் தானாக அன்புமணிக்கு வந்திருக்கும். ஒவ்வொரு மாவட்ட செயலாளரையும் அதிகாலை 3 மணி வரை தொடர்பு கொண்டு பேசி போகாதே என்றார். நான் கூட்டிய கூட்டத்துக்கு 18 பேர் வந்திருந்தனர். அவர்களிடம், என்னை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப் போவதாக பொய் சொன்னார் அன்புமணி. அப்படி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அவரை எடுக்க வேண்டிய அவசியம் என்ன? ஒரு மூடன் செய்வானா? முட்டாள் செய்வானா? ஒரு முண்டம் செய்வானா? ஒரு மூர்க்கன் செய்வானா?

அன்புமணி முடிசூட்டு விழா

அப்படி அன்புமணி செய்யாமல் இருந்திருந்தால் ஓரிரண்டு ஆண்டுகளில் நானே முடிசூட்டு விழாவை நடத்தி இருப்பேன். 3 ஆண்டுகளுக்கு முன்னர் முடிசூட்டு விழா நடந்தது. அப்போதுதான் பாமக தலைவரானார்.

பழ. கருப்பையாவின் பேட்டி

தீர்வு காண்பதற்கு தாரக மந்திரங்கள், ‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ இதை என்னுடைய அருமை நண்பர் பழ.கருப்பையா 2 பேட்டிகளில் சொல்லி இருந்தார் (மின்னம்பலம் பேட்டி). அவரோடும் நான் தொலைபேசியில் பேசினேன்.

தந்தையை மிஞ்ச கூடாது

தந்தைக்குப் பிறகே தனயன்; அய்யாவுக்குப் பிறகே அன்புமணி; இது எல்லோரும் சொல்வது; குருவுக்கு மிஞ்சிய சீடன் இருக்கலாம்; ஆனால் தந்தைக்கு மிஞ்சிய தனயன் இருக்க முடியாது; இதுவே நீதி, நியாயம், நேர்மை. இதுவே சாஸ்திர சம்பிரதாயமாகும்.

சிறுமைப்படுத்துகிறார்களே..

என்னை குலசாமி என்று சொல்லிக் கொண்டு, நெஞ்சு குலைகளில் குத்துகின்றனர்; எங்களுக்கு எல்லாம் அய்யாதான் என்று சொல்லிக் கொண்டு என்னை பாதாளத்தில் தள்ள நினைக்கின்றனர். அனைத்தும் அய்யாதான் என சொல்லிக் கொண்டு என்னை அவமானப்படுத்துகின்றனர். அய்யாவின் பெருமையை பேசுவதாக சொல்லிக் கொண்டு சிறுமைப்படுத்துகின்றனர்.

என்னை நடைபிணமாக்கிவிட்டு நடைபயணம்

அய்யாவின் லட்சியமே தங்களது லட்சியம் என கூறிக் கொண்டு என்னையே இலக்காக குறிவைக்கின்றனர். நான் உருவாக்கிய சமூக ஊடகப் பிரிவும் சமூக வலைதளங்களில் செய்கின்றன. என் கைவிரலைக் கொண்டே என் கண்களை குத்திக் கொண்டேன்.
உயிருள்ள என்ன எல்லா வகையிலும் உதாசீனம் செய்துவிட்டு என் உருவப்படத்தை மட்டும் வைத்து, உற்சவம் செய்கின்றனர். என்னை நடைபிணமாக்கி, என் பெயரில் நாடு முழுவதும் நடைபயணம் போகப் போகிறார்களாம். இது எல்லாமே நாடகம். இதில் ஒவ்வொருவரும் நடிகர்கள்.

டெல்லி பயணத்தில் நடந்தது என்ன?

7 ஆண்டுகளுக்கு முன்னரே பிரதமர் மோடி பதவியேற்பு விழாவுக்கு டெல்லி போயிருந்தேன். கவுரவத் தலைவர் ஜிகே மணி, அன்புமணி உட்பட 3 பேர் போய்விட்டு திரும்பும் போது, அப்பா.. நான் இந்த கட்சியைப் பார்த்து கொள்கிறேன் என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

விமானத்தில் ஏறுகிறோம்.. எனக்கு பின்னால் அவர் அமர்ந்திருந்தார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை..’நான் தப்பா சொல்லி இருந்தா மன்னிக்கனும்’ என்றார் அன்புமணி. அப்போது இரு சொட்டு கண்ணீர் விமானத்தில் விழுந்தது. பின்னர் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்துவிட்டு அங்கிருந்து தைலாபுரம் போய்விட்டோம். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share