டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றது.
டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி இன்று பிப்ரவரி 15- இலங்கையின் கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது. இந்திய நேரப்படி இரவு 7 மணிக்குத் தொடங்கிய இப்போட்டியில், இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன் அதிரடியாக ஆடி 77 ரன்கள் குவித்தார். அவருக்கு உறுதுணையாக சூர்யகுமார் யாதவ் 32 ரன்களும், ஷிவம் துபே 27 ரன்களும் எடுத்தனர்.
176 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி, இந்திய பந்துவீச்சாளர்களின் ’சர்ஜிகல் ஸ்டிரைக்குக்கு’ ஈடுகொடுக்க முடியாமல் திணறியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து, இறுதியில் 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பாகிஸ்தான் தோல்வியடைந்தது.
இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெறுவதற்கு முன்னரே, சில பரபரப்பான நிகழ்வுகள் அரங்கேறின. டி20 உலகக் கோப்பையிலிருந்து வங்கதேசத்தை நீக்கிவிட்டு ஸ்காட்லாந்தை ஐசிசி சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியைப் புறக்கணிப்பதாக பாகிஸ்தான் முதலில் அறிவித்தது. ஆனால், ஐசிசியின் நெருக்கடியால் பாகிஸ்தான் போட்டியில் பங்கேற்க ஒப்புக்கொண்டது.
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் ஆதெர்டன், இந்தப் போட்டியை கிரிக்கெட்டை விட பணத்துக்கே முக்கியத்துவம் அளிக்கும் ஒரு விஷத்தன்மை வாய்ந்த நாடகம் என விமர்சித்திருந்தார்.
சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியா பாகிஸ்தானை விட வலுவான சாதனையைப் பெற்றுள்ளது. இதுவரை 16 டி20 போட்டிகளில் இரு அணிகளும் மோதியுள்ளன, இதில் இந்திய அணி 13 போட்டிகளிலும் பாகிஸ்தான் 3 போட்டிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. டி20 உலகக் கோப்பையில் மட்டும் 8 முறை மோதியதில் இந்தியா 7 வெற்றிகளைப் பெற்றுள்ளது.
