சர்க்கரை வள்ளிக் கிழங்கில் பூரி சுடுவது எப்படி என்பது குறித்த செய்முறையைப் பார்க்கலாம்.
கோடைக் காலத்தில் ஆரோக்கியமான உணவு முறைகளை நாம் பின்பற்ற வேண்டியது கட்டாயமாகிறது. குறிப்பாக நீரிழப்பால் உடல்நலக்குறைவு ஏற்படலாம் என்பதால் அதனை எதிர்கொள்ள சத்தான, ஊட்டச்சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம். நாம் வழக்கமான மாவுகளை பயன்படுத்தி பூரி சுடுவதற்கு பதிலாக சர்க்கரை வள்ளிக் கிழங்கு சேர்த்த மாவில் பூரி சுடலாம். இது கோடைக் காலத்தில் சாப்பிடுவதற்கு இதமாக இருப்பதோடு, சத்துள்ளதாகவும் இருக்கும்.
சர்க்கரை வள்ளிக் கிழங்கை வேக வைக்க வேண்டும்:
முதலில் நடுத்தர அளவுள்ள புதிய சர்க்கரை வள்ளிக் கிழங்குகளைத் (Sweet potato) தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் உள்ள அழுக்குகளை நீக்க தண்ணீரில் அவற்றை நன்கு கழுவ வேண்டும். பிறகு தோல் சீவும் கருவியைப் பயன்படுத்தி தோலை உரிக்க வேண்டும். சர்க்கரை வள்ளிக் கிழங்குகளை சிறிய துண்டுகளாக நறுக்க வேண்டும். இப்படி சிறிய துண்டுகளாக நறுக்குவது அவை விரைவாகவும் சீராகவும் வேக உதவுகின்றன.
சர்க்கரைவள்ளிக் கிழங்குகளை ஆவியில் வேகவைக்க (How to steam sweet potato) வேண்டும். அதற்கு நீங்கள் ஒரு குக்கர் அல்லது மேலே ஒரு ஸ்டாண்ட் மற்றும் சல்லடையுடன் கூடிய ஒரு பாத்திரத்தையோ பயன்படுத்தலாம். இது சர்க்கரைவள்ளிக் கிழங்குகளின் ஊட்டச்சத்துக்களைப் பாதுகாப்பதோடு, அவற்றின் உட்புறத்தையும் மென்மையாக்குகிறது.
சர்க்கரைவள்ளிக் கிழங்குகள் மென்மையாகும் போது, அவற்றை ஒரு பெரிய கிண்ணத்திற்கு மாற்றி சூடாக இருக்கும்போதே நன்கு மசிக்க வேண்டும். சிறிதளவு துருவிய வெல்லத்தைச் சேர்க்க வேண்டும். வெல்லம் இயற்கையான இனிப்பைச் சேர்ப்பது மட்டுமல்லாமல், இரும்புச்சத்து (iron rich food) குறைபாட்டிற்கும் உதவும். நறுமணத்திற்காக புதிதாக அரைத்த ஏலக்காய் தூளையும் அதில் சேர்க்க வேண்டும். இதனுடன் தேவையான அளவு கோதுமை மாவை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
சர்க்கரை வள்ளிக் கிழங்கு பூரி செய்வது எப்படி?:
சர்க்கரை வள்ளிக் கிழங்கில் உள்ள ஈரப்பதமே பூரிக்கு (How to Make puri) மாவு பிசைய போதுமானது. தயார் செய்த மாவைச் சிறு உருண்டைகளாக உருட்ட வேண்டும். அவற்றை மெதுவாக பூரி சுடுவதற்கு ஏற்ற வகையில் உருட்ட வேண்டும். பூரிகளை உருட்டிய பிறகு, அதன் மீது சிறிதளவு கசகசாவைத் தூவினால் அது மொறுமொறுப்பைக் கூட்டும்.
பூரி சுடுவது எப்படி?:
ஒரு வாணலியில் கடலை எண்ணெய்யை ஊற்றவும். எண்ணெய் மிதமான சூட்டில் இருக்கும்போது, பூரிகளை கவனமாக சேர்க்கவேண்டும். அவை பந்துகள் போல உப்பி வரும் வரை, லேசாக அழுத்தி பொரிக்க வேண்டும். இருபுறமும் பொன்னிறமாகும் வரை பொரிக்க வேண்டும். இப்போது சர்க்கரை வள்ளிக் கிழங்கு பூரி ரெடி. இந்த சூடான, உப்பிய பூரிகளை உருளைக்கிழங்கு மசாலுடன் (Potato masala) பரிமாறினால் இன்னும் சுவையாக இருக்கும்.
