வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே கூந்தல் முதல் வாய் துர்நாற்றம் வரை சரிப்படுத்த முடியும்.
நாம் அனைவரும் அழகான சருமம், பளபளப்பான பற்கள், ஆரோக்கியமான கூந்தல் மற்றும் உடல் மோசமான வாசம் வரக்கூடாது என்பதையே விரும்புகிறோம். ஆனால், கடைகளில் உள்ள விலை உயர்ந்த பொருட்கள் பெரும்பாலும் நம் சருமத்திற்கும், கூந்தலுக்கும் தீங்கு விளைவிக்கும். இதுபோன்ற சூழலில் இயற்கையாகவே நமது உடலை பாதுகாக்க சில டிப்ஸ்கள் உள்ளன. இவை இயற்கையானவை, சரியாகப் பயன்படுத்தும்போது ஆகச்சிறந்த பலன்களைத் தருகின்றன. எனவே, உங்கள் அன்றாடப் பிரச்னைகளை எளிதில் தீர்க்கக்கூடிய சில சிறந்த டிப்ஸ்களைப் பார்க்கலாம்.
வாழைப்பழத் தோல்கள் (Banana peels): வாழைப்பழத் தோல்கள் வெறும் தூக்கி எறிவதற்கு மட்டும் கிடையாது. அதில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் பற்களை சுத்தம் செய்ய உதவும் தாதுக்கள் உள்ளன. வாழைப்பழத் தோலை எடுத்து, தோலின் உட்புறத்தை உங்கள் பற்களில் மெதுவாக 2 முதல் 3 நிமிடங்கள் தேய்க்க வேண்டும். பின்னர், சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். இது படிப்படியாக மஞ்சள் நிறத்தைக் குறைத்து, உங்கள் பற்கள் பளபளப்பாகவும் சுத்தமாகவும் இருக்கும். இது ஒரு இயற்கையான, ரசாயனம் இல்லாத முறையாகும்.
உடலில் வியர்வை நாற்றத்தை அகற்றும் எலுமிச்சை (Lemon removes sweat odor): கோடைக் காலத்தில் வியர்வை வருவது சகஜம்தான். ஆனால் உடல் துர்நாற்றம் தொந்தரவை ஏற்படுத்தலாம். இதனை எலுமிச்சையை பயன்படுத்தி தீர்க்க முடியும். எலுமிச்சையில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அகற்ற உதவுகின்றன. ஒரு எலுமிச்சையை பாதியாக வெட்டி, துர்நாற்றம் வீசும் பகுதியில் மெதுவாக தேய்க்க வேண்டும். சுமார் 5 நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீரில் கழுவ வேண்டும். இது உடனடியாக துர்நாற்றத்தைக் குறைத்து உங்கள் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
பொடுகை தீர்க்கும் தயிர், எலுமிச்சை கலவை (Curd and lemon mixture to treat dandruff): பொடுகு என்பது நமது தலைமுடி வேர்களை பலவீனப்படுத்தும். தயிர் உச்சந் தலையில் ஊடுருவி பொடுகைக் குறைக்கிறது. மேலும், எலுமிச்சை பூஞ்சை தொற்றுகளைக் குறைக்கிறது. முதலில், 2 தேக்கரண்டி தயிரை எடுத்து 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறுடன் கலக்க வேண்டும். அதை உச்சந்தலையில் நன்கு தடவி 20 முதல் 25 நிமிடங்களுக்குப் பிறகு உங்கள் தலைமுடியை அலச வேண்டும். இது வேர்களில் இருந்து பொடுகை சுத்தம் செய்து அரிப்பைக் குறைக்கிறது. இது முடியை மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்றுகிறது.
வெங்காயச் சாறு (Onion juice): தற்போது முடி உதிர்தல் ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது. இதற்கு வெங்காய சாறு ஒரு பயனுள்ள வீட்டு வைத்தியமாக உள்ளது. வெங்காயத்தில் உள்ள உள்ளடக்கம் முடி வேர்களை வலுப்படுத்தி உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. வெங்காய சாற்றைப் பிரித்தெடுத்து உச்சந்தலையில் மெதுவாக தடவ வேண்டும். சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு, ஷாம்பூவைப் பயன்படுத்தி உங்கள் தலைமுடியைக் கழுவ வேண்டும். இதனை அடிக்கடி செய்துவர முடி உதிர்தலைக் குறைத்து புதிய முடிகளை வளரவைக்கும்.
வாய் துர்நாற்றத்தை தீர்க்கும் கிராம்பு (Cloves to eliminate bad breath): சில நேரங்களில், பல் துலக்கிய பிறகும் கூட, வாய் துர்நாற்றம் இருக்கும். இது பாக்டீரியா, வயிற்று வலி அல்லது வாய் தொற்று காரணமாக ஏற்படலாம். கிராம்பு மிகவும் பயனுள்ள வீட்டு வைத்தியம். கிராம்புகளில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினிகள் உள்ளன, அவை உங்கள் வாயை சுத்தமாக வைத்திருக்க உதவுகின்றன. ஒன்று அல்லது இரண்டு கிராம்புகளை மெதுவாக மென்று சாப்பிடுங்கள், அல்லது சிறிது நேரம் உங்கள் வாயில் வைத்திருங்கள். கிராம்பு சாறு உங்கள் வாய் முழுவதும் பரவட்டும். பின்னர், தண்ணீர் குடிக்கவும். இது துர்நாற்றத்தை நீக்கி, உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.
