தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் பெற வீட்டு வைத்தியம் எப்படி தயாரிப்பது என்பதைப் பார்ப்போம்.
தற்போதைய பரபரப்பான வாழ்க்கையில் தலைவலி (Headache) என்பது பொதுவான பிரச்சனையாகவே மாறிவிட்டது. வேலைப் பளு, மன அழுத்தம், தூக்கமின்மை, ஒற்றைத் தலைவலி பிரச்சனை காரணமாக தலைவலி ஏற்படுகிறது. தலைவலி ஏற்பட்டுவிட்டால் ஒருவரால் மற்ற எந்த பணிகளையும் செய்ய முடியாது. தலைவலி வாட்டி எடுப்பது நமக்கு பெரும் தொல்லையாக அமைந்துவிடும்.
தலைவலியில் இருந்து உடனே விடுபட மக்கள் பெரும்பாலும் வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், நீண்ட காலம் தலைவலிக்கு மாத்திரை எடுத்துக்கொள்வது உடல்நலனில் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.
தலைவலி உடனே நீங்க வீட்டு வைத்தியம் (headache Cure Home remedies): தலைவலி உடனே பறந்துபோக எளிமையாக வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் கஷாயம் ஒன்றே போதும். அதனை எப்படி தயாரிப்பது, என்னென்ன பொருட்கள் தேவை என்பதைப் பார்ப்போம்.
கஷாயம் வைக்க தேவையான பொருட்கள்(Ingredients):
- கிராம்பு – 2 முதல் 3 துண்டுகள் மட்டும்
- ஏலக்காய் – இரண்டு துண்டுகள்
- இஞ்சி – ஒரு சிறிய துண்டு நறுக்கியது
- தண்ணீர்
தலைவலி போக்கும் கஷாயத்தை தயாரிப்பது எப்படி? (how to make Home remedy): முதலில் சிறிய துண்டு இஞ்சியை நன்றாகக் கழுவி நசுக்கிக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் நசுக்கப்பட்ட இஞ்சியை போட வேண்டும். அதன்பிறகு ஏற்கனவே தயாராக வைத்திருக்கும் ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
இப்போது நாம் கலந்து வைத்திருக்கும் இஞ்சி, கிராம்பு, ஏலக்காய் கலவையை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் காய்ச்ச வேண்டும். அதாவது ஒரு குவளை தண்ணீர் பாதியாக மாறும் வரை கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் பாதியாக குறைந்த உடன் கஷாயத்தை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ளலாம்.
கஷாயத்தை ஒரே நேரத்தில் மொத்தமாக குடிக்க வேண்டாம். அதற்கு பதிலாக கொஞ்சம் கொஞ்சமாக பருகலாம். கஷாயத்தின் இதமான சூடு என்பது தலைவலியில் இருந்து உடனடியாக நமக்கு நிவாரணம் அளிக்கிறது.
கஷாயத்தால் ஏற்படும் நன்மைகள் (Benefits of ginger, cardamom, and clove Remedy): இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் தலையில் உள்ள நரம்புகளின் வீக்கத்தை குறைத்து மன அழுத்தத்தையும் குறைக்கின்றன. கிராம்பு வலி நிவாரணியாக செயல்படும் பண்புகளைக் கொண்டுள்ளது. ஏலக்காய் மனதை அமைதிப்படுத்தி பதற்றத்தால் ஏற்படும் தலைவலியை தடுக்கிறது.
அடிக்கடி தலைவலியால் அவதிப்பட்டால், மருந்துகள் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனையை தவிர்க்க விரும்பினால் இந்த கஷாயத்தை முயற்சி செய்து பார்க்கலாம். ஆனால், தலைவலி தொடர்ந்தால் மருத்துவரை சந்தித்து ஆலோசனைகள் பெற வேண்டும்.
