விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்துக்கு U/A சான்றிதழை உடனே வழங்க மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படம் ஜனநாயகன். இத்திரைப்படம் இன்று ஜனவரி 9-ந் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இத்திரைப்படத்துக்கு சென்சார் சான்றிதழை தணிக்கைக் குழு வழங்கவில்லை. இதனால் உலகம் முழுவதும் ஜனநாயகன் திரைப்படம் இன்று வெளியாகவில்லை.
இது தொடர்பாக ஜனநாயகன் படத் தயாரிப்பு நிறுவனமான KVN புரொடக்ஷன்ஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதி ஆஷா விசாரித்தார்.
இந்த விசாரணையின் போது, டிசம்பர் 19-ந் தேதி தணிக்கைக் குழு ஜனநாயகன் திரைப்படத்தை பார்த்தது. அதில் திருத்தங்கள் செய்ய பரிந்துரைத்தது. திருத்தங்கள் செய்த பின்னரும் சென்சார் சான்றிதழ் வழங்கப்படவில்லை என தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆஜரான சதீஷ் பராசரன் வாதிட்டார்.
ஆனால் தணிக்கை குழுவின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ஜனநாயகன் திரைப்படத்தில் மத உணர்வுகளைப் புண்படுத்தும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக புகார் வந்துள்ளதால் மறு தணிக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது; குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சான்றிதழ் வழங்க நிர்பந்திக்க முடியாது என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆஷா, இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று காலை தீர்ப்பளித்த நீதிபதி ஆஷா, ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு உடனடியாக U/A தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டார். மேலும் ஜனநாயகன் திரைப்படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பிய தணிக்கை வாரியத்தின் உத்தரவையும் நீதிபதி ஆஷா ரத்து செய்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக தணிக்கை குழு மேல்முறையீடு செய்யுமா? அல்லது நீதிமன்ற உத்தரவை ஏற்று தணிக்கை சான்றிதழை உடனே வழங்குமா? என்பது எதிர்பார்ப்புக்குரியது. அப்படியே தணிக்கை சான்றிதழ் வழங்கினாலும் படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு கிடைப்பதற்கு 48 மணிநேரங்களாகும் என்கின்றனர் தணிக்கை குழு உறுப்பினர்கள்.
