கட்சிகளின் சொத்தாகக் குடும்பங்களும் குடும்பங்களின் சொத்தாக கட்சிகளும்!
அ. குமரேசன்
ஆட்சியிலும் கட்சியிலும் குடும்பத்தினர் ஆதிக்கம் பற்றி நிறையவே பேசப்பட்டிருக்கிறது. சில கட்சிகளின் தலைவர்கள் வேறொரு கட்சியை விமர்சிக்க இதையே ஆயுதமாக எடுத்துக்கொள்வார்கள். பாஜக தலைவர்கள் இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியையும், தமிழகத்தில் திமுக–வையும் தாக்குவதற்கு இதை முக்கியக் குற்றமாகக் கூறுவார்கள். அந்தக் கட்சியிலேயே இரண்டாவது மூன்றாவது மட்டங்களில் அப்படித்தானே இருக்கிறது என்ற கேள்வியைக் கண்டும் காணாமல் கடந்துவிடுவார்கள். இப்போது தைலாபுரம் உட்புற விவகாரம் வெளிப்புறம் வந்திருப்பதையொட்டி வாரிசு அரசியல் பற்றிய பேச்சு மறுபடி முன்புறம் வந்திருக்கிறது. Heirs in Politics or Politics of Heirs?
அந்தக் கட்சிக்குள் அப்படியென்ன பிரச்சினை என்று எல்லா ஊடகங்களிலும் பல்வேறு கோணங்களில் பகிரப்பட்டு வருகிறது. அவை எல்லாவற்றையுமே சேர்த்துப் படித்தால் கூட முழு உண்மையைத் தெரிந்துகொள்ள முடியுமா என்று தெரியவில்லை. அவற்றை அலசுவது இக்கட்டுரையின் நோக்கமுமல்ல. ஒருநாள் ஆவேசமாக, மறுநாள் உணர்ச்சிகரமாக வருகிற அய்யா, சின்னய்யா பேட்டிச் செய்திகளால் தொண்டர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அரசியல் போக்குகளைக் கவனித்து வருகிறவர்களும் குழம்பியிருக்கிறார்கள்.

படம்: பாமக தலைவர் அன்புமணி, நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
“குடும்ப அரசியல்தான் என்று முடிவான பிறகு, குறிப்பிட்ட கட்டத்தில் வாரிசிடம் முழுப் பொறுப்பையும் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக்கொள்ள மறுப்பதால்தான் இன்றைய சிக்கல்,” என்கிறார் அரசியல் கருத்தாளரான ஊடக நண்பர். “பெரிய தலைவர் இப்போதும் ஈர்ப்பு மையமாக இருக்கிறபோது இளையவர் அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிப்பதுதான் பிரச்சினைக்கு மூல காரணம்,” என்கிறார் மற்றொரு பத்திரிகையாளர்.
“இந்த இரண்டுமே காரணங்களாக இருக்கலாம், ஆனால் அடிப்படையான காரணம், இந்த வாரிசு அரசியல்தான். இயக்கங்களின் சொத்தாகத் தங்களை ஒப்படைத்துக்கொண்டு உழைக்கிற பல குடும்பங்கள் இருக்கின்றன. ஆனால் இயக்கத்தையே குடும்பச் சொத்தாக வைத்துக்கொள்கிறபோது இப்படிப்பட்ட குழப்பங்கள் வரத்தான் செய்யும். வேறு மாற்று இல்லாத நிலையில் கட்சிக்காரர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்றாலும், இதில் அடிப்படையான உட்கட்சி ஜனநாயகம் அடிபட்டுப் போகிறது,” என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது. கட்சியின் அடுத்த மட்டங்களில் இருப்பவர்களுக்கு இடையேயான தலைப்பாகைப் போட்டியில் சிதறிவிடாதபடி அமைப்பைக் கட்டுக்கோப்பாக நடத்துவதற்கு வாரிசு அரசியல் உதவுகிறது என்ற நேர்மறைக் கருத்தும் கூறப்படுகிறது.
நாடு தழுவிய அளவிலும், பல மாநிலங்களிலும் இந்தப் போக்கு இருந்து வருவதால், இந்த விமர்சனத்தைப் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வருகிற ஊடகங்களிலும் கட்டுரைகளாக, தலையங்கங்களாக, நேர்காணல் பதிவுகளாகக் காண முடிகிறது. குடும்ப/வாரிசு அரசியல் பற்றிய ஆய்வறிக்கைகளும் வெளியாகியுள்ளன. எந்தெந்தக் கட்சிகளில் என்ன நிலைமை என்று சுருக்கமாகப் பார்த்துவிட்டு, உலக நிலவரத்திற்குப் போய் வருவோம். அந்தப் பயணத்தில் இந்த நவீன ஜனநாயகக் காலத்திலும் மன்னராட்சிக் காலத்துக் குடும்ப/வாரிசு முறை அரசியல் தொடர்வதன் காரணங்களையும், அதன் சாதக/பாதக விளைவுகளையும் பார்ப்போம்.

படம்: தந்தை ஜவஹர்லால் நேருவுடன் இந்திரா காந்தி
அப்போதே தொடங்கியது
குடும்ப வாரிசு அரசியல் வாரிசாகவும் வருவது ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோதே காங்கிரஸ் கட்சியில் தொடங்கிவிட்டது. அவரது மகள் இந்திரா காந்தி 1959இல் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த ஆண்டு வரையில் அவர் அந்தப் பொறுப்பில் இருந்தார். 1964இல் நேருவின் மறைவுக்குப் பிறகு பிரதமரான லால்பகதூர் சாஸ்திரி 1966இல் காலமானதைத் தொடர்ந்து, அதே ஆண்டில் இந்திரா காந்தி பிரதமர் அலுவலகத்திற்கு வந்தார் – காமராஜர் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அவரை வரவழைத்தார்கள். 1969இல் காங்கிரஸ் அந்த மூத்தவர்களைக் கொண்ட நிறுவன காங்கிரஸ் (ஓ), குறிப்பிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியவர்கள் என்ற அடையாளத்துடன் இந்திரா உள்ளிட்டோரைக் கொண்ட கோரிக்கையாளர்கள் காங்கிரஸ் (ஆர்) என இரண்டாகப் பிளவுபட்டது. மக்களிடையே அது இந்திரா காங்கிரஸ் என்றே அடையாளம் பெற்றது.

படம்: இந்திரா காந்தி
1975இல் இந்திரா காந்தி குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது மூலம் அவசர நிலை ஆட்சியை அறிவித்தார். 21 மாதங்கள் பத்திரிகைத் தணிக்கை உள்ளிட்ட கருத்துச் சுதந்திரக் கெடுபிடிகளையும் கடும் அடக்குமுறைகளையும் செயல்படுத்திய அவரசர நிலை ஆட்சியின் முடிவுக்குப் பிறகு, 1978இல் இந்திய தேசிய காங்கிரஸ் (இ) என்ற புதிய கட்சியை அறிவித்தார். அந்த “இ” (ஆங்கிலத்தில் “ஐ”) அவருடைய பெயரின் முதலெழுத்துதான். அவசரநிலை ஆட்சியின்போது அரசமைப்பு சாசனத்திற்கு அப்பாற்பட்ட அதிகார மையமாக ஆட்டப்போடுகிறார் என்று குற்றம் சாட்டப்பட்ட இளைய மகன் சஞ்சய் காந்தி அவருடைய அரசியல் வாரிசாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விமான சாகச விபத்தில் உயிரிழந்தார்.

படம்: சஞ்சய் காந்தி, இந்திரா காந்தி, சோனியா காந்தி, ராஜீவ் காந்தி, ராகுல், பிரியங்கா காந்தி
1984இல் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மூத்த மகன் ராஜீவ் காந்தி பிரதமரானார். 1985இல் கட்சியின் தலைவராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1984 டிசம்பர் மக்களவைத் தேர்தலில் நாட்டிலேயே முதல் முறையாகவும் – கடைசி முறையாகவும் – அதிக இடங்களில் 414 தொகுதிகளில் அக்கட்சி வெற்றி பெற்று, மறுபடி பிரதமரானார். ஆனால் 1989இல் நடந்த அடுத்த பொதுத் தேர்தலிலேயே காங்கிரஸ் படுதோல்வியடைந்தது. 1991 தேர்தல் சுற்றுப் பயணத்தின்போது திருப்பெரும்புதூரில் மனித குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். 1996இல் அந்த “இ” என்ற முன்னெழுத்து ஒட்டு நீக்கப்பட்டு மறுபடியும் இந்திய தேசிய காங்கிரஸ் என்றே ஆனது. ராஜீவ் மனைவி சோனியா காந்தி கட்சியின் தலைவராக இருந்து வந்தார். தற்போது, அவர்களுடைய மகன் ராகுல் காந்தி, அமைப்பின் தலைவர் பதவியில் இல்லை என்றாலும், அக்கட்சியின் தலைவராகவே நாட்டு மக்களால் அறியப்படுகிறார். அவருடைய சதோதரி பிரியங்கா வதேராவும் அரசியலில் ஈடுபட்டிருக்கிறார்.

படம்: சோனியா, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி
இதற்கிடையே, சஞ்சய் காந்தியின் மனைவி மேனகா காந்தி, மாமியார் குடும்பத்துடன் ஏற்பட்ட மனத்தாங்கலில் காங்கிரசை விட்டு விலக, அவரை பாஜக வரவேற்றது, ஒன்றிய அரசில் அமைச்சராகவும் ஆக்கியது. அவருடைய மகன் வருண் காந்தி 2009 முதல் 2024 வரையில் அந்தக் கட்சியின் மக்களவை உறுப்பினராக இருந்தார்.
ராகுல் காந்திதான் கட்சியின் தலைவராவார் என்ற எதிர்பார்ப்புகள் பரவியிருந்த நிலையில், நேரு குடும்பத்திற்கு அந்தக் கட்சியை அடகு வைத்துவிட்டார்கள் என்று பாஜக அதையே அரசியல் பிரச்சினையாக்கி வந்தபோது, அவர் அந்தப் பொறுப்பை ஏற்க மறுத்தார். மல்லிகார்ஜுன கார்கே தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அவரிடமிருந்துதான் வருகின்றன என்றாலும், நடைமுறை அரசியல் களத்தில் ராகுல்தான் காங்கிரஸ் தலைவராகப் பார்க்கப்படுகிறார்.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் அந்தக் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவராகப் பரப்புரைகளில் ஈடுபட்டிருக்கிறார். இது போல அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் தலைமைப் பொறுப்புகளில் வாரிசுகளைப் பார்க்க முடியும்.
பாஜக–வுக்குள் வாரிசுகள்
இந்த வாரிசு அரசியலைக் கடுமையாக விமர்சிக்கிற பாஜக, சொந்தக் கோபத்தில் வெளியேறிய மேனகாவை அமைச்சராக்கியதிலும் வருணை மக்களவை உறுப்பினராக்கியதிலும் நேரு குடும்பத்திற்கு உள்ள ஆதரவுத் தளத்தை அரித்துத் தனதாக்கிக்கொள்கிற நோக்கம் இல்லையா என்ன? அதையாவது அரசியல் தந்திரமாக எடுத்துக்கொள்ளலாம் என்றால், பிரதமர் நரேந்திர மோடி தவிர்த்து அடுத்தடுத்த தேசிய மட்டங்களிலும் மாநிலங்களிலும் பாஜக தலைவர்களின் வாரிசுகள் அரசிய களத்திற்குக் கொண்டுவரப்பட்டிருப்பட்டிருப்பதை என்ன சொல்வது?

படம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா , மகன் ஜெய்ஷா
பாதுகாப்புத்துறை அமைச்சரான ராஜ்நாத் சிங் அக்கட்சியின் முன்னாள் தேசியத் தலைவருமாவார். அவரது மகன் பங்கஜ் சிங், உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்ற உறுப்பினர். உள்துறை அமைச்சர் அமித் ஷா. அவருடைய மகன் ஜெய் ஷா, நாட்டின் மிகப் பணக்கார விளையாட்டு அமைப்பான இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர். அது அரசியல் பதவி இல்லையே என்று கேட்கலாம், அதிலே அரசியல் இல்லையா என்றும் கேட்கலாம். மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், இமாசலப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் ப்ரீம் குமார் துமால் மகன். காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் செல்வாக்கு செலுத்திய சிந்தியா குடும்பத்தைச் சேர்ந்தவரான .ஜோதிராதித்ய சிந்தியா, இப்போது ஒன்றிய அரசில் ஒரு அமைச்சர்.
மாநிலங்களைப் பார்த்தால், அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான பிரஜ் பூஷன் சரண் சிங் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர். அவருடைய மகன் கரண் பூஷண் சிங் தற்போது கெய்சர்கஞ்ச் தொகுதியில் அக்கட்சியின் வேட்பாளர். கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பி.எஸ். யெடியூரப்பாவின் மகன் பி. விஜயேந்திரா , 2023இல் அக்கட்சியின் மாநிலத் தலைவராக்கப்பட்டார்.

படம்: மறைந்த பாஜக தலைவர் பிரமோத் மகாஜன் மகள் பூனம் மகாஜன்
மகாராஷ்டிரா மாநிலத்தில்: முன்னாள் மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜனின் மகள் பூனம் மகாஜன், சகோதரி மகள்கள் பங்கஜா முண்டே, பிரீதம் முண்டே ஆகியோர் கட்சிய்ன் முக்கியப் பதவிகளில் உள்ளனர். உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் மகன் ராஜ்பீர் சிங் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்.
தமிழகத்தில்
இதுவரை பார்த்தது இரண்டு தேசிய கட்சிகள் வாரிசு நிலவரம். மாநிலக் கட்சிகளைப் பார்த்தால், முதலில் குடும்ப அரசியல் என்ற தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவது தமிழகத்தின் திமுக. அதன் தலைவராக இருந்தவரான, மறைந்த முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் மகன் மு.க. ஸ்டாலின் இப்போது கட்சித் தலைவர், முதலமைச்சர் இரு பொறுப்புகளிலும் இருக்கிறார். கருணாநிதி மகள் கனிமொழி நாடாளுமன்ற உறுப்பினர், கட்சியின் துணைப் பொதுச்செயலாளர். கருணாநிதியின் பேரன் – மகன் ஸ்டாலினின் மகன் உதயநிதி – கட்சியின் இளைஞரணிச் செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர், துணை முதலமைச்சர்.

படம்: கலைஞர் கருணாநிதி, கருணாநிதி- முரசொலி மாறன், உதயநிதி ஸ்டாலின்- ஸ்டாலின், கனிமொழி- கருணாநிதி
இவர்களன்றி, திமுக தலைவர்களில் ஒருவரும் மத்திய அமைச்சராக இருந்தவருமான கருணாநிதியின் சகோதரி மகன் முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன், மற்றொரு மூத்த தலைவர் ஆற்காடு வீராசாமி மகன் கலாநிதி வீராசாமி, என்விஎன் சோமு மகள் கனிமொழி சோமு ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்கள். அமைச்சர் தங்கம் தென்னரசு, மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் இருவரும் மறைந்த அமைச்சர் தங்கபாண்டியனின் பிள்ளைகள். அமைச்சராக இருந்த பி.டி.ஆர். பழனிவேல் ராஜனின் மகன்தான் இன்று அமைச்சராக உள்ள அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.அமைச்சர் ஐ. பெரியசாமியின் மகன் செந்தில்குமார் ஒரு சட்டமன்ற உறுப்பினர். அமைச்சராக இருந்த அன்பில் தர்மலிங்கத்தின் பேரன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஓர் அமைச்சர். மூத்த அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் ஒரு மக்களவை உறுப்பினர். உள்ளாட்சி அமைப்புகளிலும் திமுக–வின் வட்டாரத் தலைவர்களுடைய வாரிசுகள் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள், கட்சியிலும் களமாடிக்கொண்டிருக்கிறார்கள்.
பாஜக–வோடு சேர்ந்து கலைஞர் குடும்பத்தின் அரசியல் பங்கேற்பைக் குற்றமாகக் கூறிவரும் அதிமுக தலைவர்கள், இந்த இரண்டாவது, மூன்றாவது நிலைத் தலைவர்களின் வாரிசுகள் வருகை பற்றி எதுவும் கூறுவதில்லை. காரணம் அந்தக் கட்சியில் பல முக்கிய தலைவர்களுடைய குடும்பத்தினரும் அரசியல் களத்தில் செயல்படுவதாக இருக்கலாம். ஓபிஎஸ் (அதிமுகவில் தனி அணியாவதற்கு முன்) தனது மகனை நாடாளுமன்ற உறுப்பினராக்கினார்.

படம்: வைகோ, துரை வைகோ
வாரிசு அரசியல் பற்றிய இன்றைய விவாதத்தில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய பாமக விவகாரத்திலிருந்துதான் இந்தக் கட்டுரையே தொடங்குகிறது. மறுபடி அதைச் சொல்ல வேண்டியதில்லை. மற்றொரு முக்கியமான, இங்கேயும் குடும்பச் சண்டையா என்று கேட்க வைத்த, பிறகு சமாதானம் ஏற்படுத்தப்பட்ட மற்றொரு கட்சி மதிமுக. அதன் பொதுச்செயலாளர் வைகோ–வின் மகன் துரை வைகோ அக்கட்சியின் முதன்மைச் செயலாளர்.

படம்: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, நிறுவனத் தலைவர் விஜயகாந்த்
நடிகராக இருந்த விஜயகாந்த் தொடங்கிய புதிதில் சட்டமன்றத்தில் பெரிய எதிர்க்கட்சி என்கிற அளவுக்கு மக்களால் வாய்ப்பளிக்கப்பட்ட, பின்னர் அந்த வாய்ப்பை அவர் இருக்கிறபோதே இழந்துவிட்ட தேமுதிக–வின் பொதுச்செயலாளர் அவருடைய இணையர் பிரேமலதா. பிரேமலதாவின் சகோதரர் சுதீஷ் தேமுதிக பொருளாளர் மகன் விஜய பிரபாகரன் இளைஞரணிச் செயலாளர்.

படம்: தேவகவுடா-குமாரசாமி; பரூக் அப்துல்லா- ஒமர் அப்துல்லா, ஆதித்ய தாக்கரே- உத்தவ் தாக்கரே; முலாயம்சிங் யாதவ்- அகிலேஷ் யாதவ்
பிற மாநிலங்கள்
காஷ்மீரில் தேசிய மாநாடு கட்சியின் தலைவர்களாகவும் முதலமைச்சர்களாகவும் இருந்த ஷேக் அப்துல்லா, மகன் ஃபரூக் அப்துல்லா, பேரன் ஒமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் முஃப்தி முகமது சையது மகளும் முதலமைச்சராக இருந்தவருமான மெஹபூபா முஃதி, அவரது மகள் இல்திஜா முஃப்தி, உத்தரப் பிரதேசத்தின் முலாயம் சிங் யாதவ், மகன் அகிலேஷ் யாதவ், ஹரியானாவின் தேவிலால், ஓம் பிரகாஷ் சவுதாலா, தெலங்கானாவின் கே. சந்திரசேகர் ராவ், அவருடைய மகன் கே.டி. ராமாராவ், மகள்கே. கவிதா, ஆந்திர மாநிலத்தின் என்.டி. ராமாராவ், அவருடைய மருமகன் சந்திரபாபு நாயுடு, ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டி, மகன் ஜெகன் மோகன் ரெட்டி, கர்நாடகத்தின் தேவ கவுடா, அவரது மகன் ஒன்றிய அமைச்சர் எச்.டி. குமாரசாமி, மஹாராஷ்டிரத்தின் பால் தாக்கரே, மகன் உத்தவ் தாக்கரே, பேரன் ஆதித்ய தாக்கரே, ஜார்க்கண்ட் மாநில ஷிபு சோரன், அவரது மகன் ஹேமந்த் சோரன், ஒடிஷாவின் பிஜூ பட்நாயக், மகன் நவீன் பட்நாயக், பஞ்சாப் மாநிலத்தில் பாதல் குடும்பத்தினர் ஆகியோரும் அரசியல் முன்னரங்கில் இருந்தவர்கள் – இருப்பவர்கள். பல்வேறு மாநிலங்களிலும் குறிப்பிட்ட குடும்பங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பல சிறிய கட்சிகள் இருக்கின்றன.
2019ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தலில் தேசியக் கட்சிகள் நிறுத்திய மொத்தம் 856 வேட்பாளர்களில் 227 பேர் வாரிசுகள்தான். மாநிலக் கட்சிகள் நிறுத்திய 1333 வேட்பாளர்களில் 162 பேர் வாரிசுகள். ஆய்வாளர் முடாசிர் பஷீர் பாட் தனது “இந்தியாவில் வாரிசு அரசியலும் ஜனநாயகப் பற்றாக்குறையும்” என்ற ஆய்வறிக்கையில் இதைத் தெரிவித்துவிட்டு, எந்தெந்த மாநிலத்தில் எத்தனை சதவீதத்தினர் வாரிசு வேட்பாளர்கள் என்று பட்டியலையும் தந்திருக்கிறார்.
“இந்திய அரசியல் பல அரசியல் குடும்பங்கள் தொடர்பாக சகிப்புத்தன்மையுடன் இருந்து வருவதை இது காட்டுகிறது. இந்தியாவில் நிலவும் வாரிசு அரசியல் அல்லது குடும்ப அரசியல் மரபு, மக்கள் பிரதிநிதித்துவத்தின் ஜனநாயக அம்சத்தைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது, இது எவ்வாறு ஒரு ஜனநாயகப் போதாமைக்கு இட்டுச் செல்லக்கூடும் என எடுத்துக்காட்டுகிறது,” என்கிறார் அந்த ஆய்வாளர் (‘இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் பொலிடிகல் சயின்ஸ் அன் கவர்னன்ஸ்’).
.‘ஆக, நாடு முழுவதும் அந்தந்தக் கட்சிகளின் பல்வேறு நிலைகளில் உள்ள தலைவர்களாலும் தொண்டர்களாலும் பொதுமக்களாலும் ஏற்கப்பட்ட நடைமுறையாகவே குடும்ப அரசியல் இருக்கிறது, இயல்பான ஒன்றாகவே வாரிசுகளின் வருகை இருக்கிறது. ஒரு பகுதியினர் குடும்பத்தினர் ஆதிக்கம் குறித்த முகச்சுளிப்புகளோடு இருந்தாலும், மக்களைப் பொறுத்தவரையில் வாரிசாக வந்தவர்களா, களச் செயல்பாடுகளால் வந்தவர்களா என்று பார்க்கவில்லை, அப்படி வந்தவர்கள் என்ன செய்கிறார்கள் என்றுதான் மதிப்பிடுகிறார்கள்.
தலைவர்களின் நேரடி ரத்த உறவுகள் என்பதற்காகவே, அல்லது குடும்பச் சொந்தங்கள் என்பதற்காகவே அவ்வாறு வருகிற எல்லோரையும் ஏற்றுக்கொள்வதில்லை. ஒரு தலைவரின் பிள்ளைகளில் ஓரிருவரைத்தான் ஏற்கிறார்கள். தலைவர் வாரிசு என்ற கடவுச் சீட்டைத் தாண்டி சொந்தச் செயல்பாடுகளால் தங்களை நிறுவிக்கொள்ளாதவர்களை ஓரங்கட்டிவிடுகிறார்கள். தமிழ்நாட்டிலேயே இதற்கு எடுத்துக்காட்டுகள் உண்டு – அதையெல்லாம் சொல்ல வேண்டுமா என்ன?
மற்ற நாடுகளின் அரசியல் மேடைகளில் குடும்ப உறவுக் காட்சிகள் எப்படி இருக்கின்றன? நவீன ஜனநாயகக் காலக் கட்டத்தில் இந்தப் பழைய உறவரசியல் ஏற்கப்படுவதன் சமூக உளவியல் என்ன? இதில் எதிர்மறையான தாக்கங்கள்தான் ஏற்படுகின்றனவா அல்லது ஆக்கப்பூர்வமான பலன்களும் விளைகின்றனவா?
[தொடரும்]