அரசியல் வாரிசும் வாரிசு அரசியலும்- பகுதி 2

Published On:

| By Minnambalam Desk

Family Politics

உலக நிலைமைகள் முதல் உள்ளூர் உத்திகள் வரையில்

. குமரேசன்

இந்திரா காந்தி விடுதலைப் போராட்டக் காலத்திலேயே பொதுவாழ்க்கைக்கு வந்துவிட்டார். மோதிலால் நேருவின் பேத்தி, ஜவஹர்லால் நேருவின் மகள் என்ற அறிமுகங்களைக் கடந்து, சிறுவயதிலேயே “வானர சேனா” (குரங்குப் படை) என்று ஏற்படுத்தி, நண்பர்களை இணைத்துக்கொண்டு தடை செய்யப்பட்ட காங்கிரஸ் வெளியீடுகளை மக்களிடையே விநியோகிப்பது, போராட்டச் செய்திகளைக் கொண்டு செல்வது என்று களமிறங்கினார். “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தில் பங்கேற்றதால் சிறையில் அடைக்கப்பட்டார். Heirs in Politics and the Politics of Heirs – Part 2:

படம்: இந்திரா காந்தி

சுதந்திரத்திற்குப் பிறகு இந்திரா காந்தி, கேரளத்தின் கம்யூனிஸ்ட் கட்சி அரசுக்கு எதிரான கலகங்களைக் கிளப்புகிற வேலைகளில் ஈடுபட்டார். தன்னுடைய சொந்தத் தகுதியின் அடிப்படையில் கட்சி விவகாரங்களைக் கையாண்டவர், அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த காலத்திலும், அதற்குப் பின்னரும் தொடர்ச்சியான இயக்கச் செயல்பாடுகளை மேற்கொண்டார், அதன் அடிப்படையிலேயே கட்சிக்காரர்களிடையே அவருக்கு ஒரு தனித்துவமான ஏற்பு கிடைத்தது.

படங்கள்; முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் திடுதிப்பென்று திமுக தலைமைக்கு வந்துவிடவில்லை. அவரும் 14 வயதிலிருந்தே களச் செயல்பாடுகளில் ஈடுபட்டுதான் பரந்த அனுபவங்களையும் விரிந்த தொடர்புகளையும் பெற்றார். அவசரநிலை ஆட்சியின்போது ‘மிசா’ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார், சிறைக்குள் தாக்கப்பட்டார். திமுக இளைஞரணி உருவாக்கப்பட்டதில் முக்கியப் பங்காற்றினார், அதன் செயலாளராகவும் நீண்டகாலம் பங்களித்தார். 1989 முதல் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கபட்டு வந்திருக்கிறார். கட்சியின் பல்வேறு பொறுப்புகள், சென்னை மேயர், அமைச்சர், துணை முதலமைச்சர் என்று ஆட்சி நிர்வாகப் பட்டறிவைத் தேடிக்கொண்டார்.

இதே போலத்தான் எல்லாக் கட்சிகளிலும் வாரிசுகள் முன்னணிக்கு வந்திருக்கிறார்களா? அப்படிச் சொல்லிவிட முடியாது. உத்தரப்பிரதேச மாநிலத்தில்   முதலமைச்சராக இருந்தவரான அகிலேஷ் யாதவ், அதற்கு முன் வெளிநாட்டில் படித்துக்கொண்டிருந்த நிலையில் திடீரென்று சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். கட்சியின் தலைவரான முலாயம் சிங் யாதவ் தனது முடிவுப்படி மகனை அரசியலுக்குக் கொண்டு வந்தார். பிற்காலத்தில் கட்சிக்குள் பூசல் ஏற்பட்டு, பூசி மறைக்க முடியாத அளவுக்குப் போய், தந்தையையும் சகோதரையும் எதிர்த்துத் தானே கட்சியின் தேசியத் தலைவராக முடிசூட்டிக்கொண்டார். இவ்வாறு தந்தைமார்களின் செல்வாக்கு அடிப்படையில் கட்சிக்குள் வந்தாலும், அதன் பிறகு தங்களது தகுதியை வளர்த்துக்கொண்டவர்களும் உண்டு.

எட்டுத் திசையிலும்

இந்தக் காட்சிகள் இந்தியாவுக்கு மட்டுமே உரியவை அல்ல. உலகில் பல நாடுகளில் குடும்ப அரசியலைக் காண முடியும். பொதுவாக ஆசிய நாடுகளில், குறிப்பாக தெற்காசிய நாடுகளில்தான் இது பரவலாகவும் வலுவாகவும் இருக்கிறது என்ற கருத்து உண்டு. ஆசிய சமூக அமைப்போடு தொடர்புள்ள அரசியல் போக்கு இது என்றும் கருத்தாளர்கள் கூறியிருக்கிறார்கள். அதில் உண்மை இருக்கிறது என்றாலும், மேற்கத்திய நாடுகளில் வாரிசு அரசியல் இல்லை என்று கூறிவிட முடியாது.

ஜனநாயகம் ஆழமாக வேரூன்றியிருப்பதாகக் கூறப்படும் அமெரிக்காவில், இங்கே பார்ப்பது போன்ற வடிவில் இல்லையென்றாலும், பல முக்கிய அரசியல் தலைவர்களின் குடும்பங்களைச்  சேர்ந்தவர்கள் கட்சிப் பதவிகளுக்கும் ஆட்சிப் பொறுப்புகளுக்கும் வந்திருக்கின்றனர். அவ்வகையில் செல்வாக்கு மிக்க அரசியல் குடும்பம் என்று கென்னடி இல்லம் கருதப்படுகிறது. அயல்நாட்டுத் தூதராக இருந்த ஜோசப் பி. கென்னடி, 35ஆவது அரசுத் தலைவராக (அதிபர்) இருந்து சுட்டுக் கொல்லப்பட்ட ஜான் எஃப். கென்னடி, அவருடைய தம்பியும் நாடாளுமன்ற மேலவை (செனட்) உறுப்பினராக இருந்தவரும் சுட்டுக் கொல்லப்பட்டவருமான  ராபர்ட் கென்னடி, மசாசூசெட்ஸ் மாநில மேலவை உறுப்பினரான மகன் எட்வர்ட் எம் கென்னடி, ராபர்ட் மகனும் பிரதிநிதிகள் சபை உறுப்பினருமான ஜோசப் பி கென்னடி, அவருடைய மகனும் பிரதிநிதிகள் சபை உறுப்பினருமான ஜோ கென்னடி ஆகியோர் அந்த செல்வாக்கின் சாட்சியங்கள்.

படம்: ஜார்ஜ் புஷ் குடும்பம்

தந்தையும் மகனுமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் அரசுத் தலைவர்களானது புஷ்  குடும்பத்திலிருந்துதான். கனாட்டிகட் மாநில  மேலவை உறுப்பினராக இருந்தவர் பிரெஸ்காட் புஷ். அவருடைய மகன் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் சிஐஏ இயக்குநராக இருந்து, நாட்டின் 41ஆவது அரசுத் தலைவராகப் பொறுப்பேற்றவர். அவருடைய மகன் ஜார்ஜ் வாக்கர் புஷ் 43ஆவது அரசுத் தலைவர். உடன்பிறப்பான ஜெப் புஷ் ஃபுளோரிடா மாநில ஆளுநர். இரண்டு அரசுத் தலைவர்களைத் தந்த மற்றொரு இல்லம் ரூஸ்வெல்ட் குடும்பம். தியோடர் ரூஸ்வெல்ட் 26ஆவது அரசுத் தலைவர். அவரது ஐந்தாவது தலைமுறையைச் சேர்ந்தவரான ஃபிராங்க்ளின் டெலானா ரூஸ்வெல்ட் 32ஆவது தலைவர்.

படம்: பில் கிளின்டன் குடும்பம்

42ஆவது தலைவர் பில் கிளின்டன். அவருடைய இணையரும் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவருமான ஹிலாரி கிளின்டன், மகளும் அரசியல் களம் இறங்கியிருப்பவருமான செல்சீ கிளின்டன் உள்பட அரசியலுக்கு வந்த குடும்பங்களைக் குறிப்பிடலாம். நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை, மேலவை, மாநில சபைகள் இவற்றின் உறுப்பினர்கள், ஆளுநர்கள் ஆகியோரின் வாரிசுகளும் அரசியலில் செயல்படுகிறார்கள்.

இந்தக் குடும்பங்களை, நம் ஊரில் காண்பது போன்ற “வாரிசு அரசியல்” வகையறாவில் சேர்க்காவிட்டாலும் கூட, அவர்களின் குடும்பப் பெயரும் தொடர்பு வலைகளும் அடுத்த தலைமுறையினர் அரசியலுக்கு வருவதற்கு ஒரு “பாலம்” அமைத்துத் தருகின்றன என்று கருத்தாளர்கள் கூறுகிறார்கள். சொந்தத் தகுதியும், மக்களின் ஏற்பும் இருந்தாக வேண்டும் என்றாலும், ஏற்கெனவே இருக்கும் குடும்பப் பெயர் ஒரு தொடக்கநிலை நுழைவுச் சீட்டாகிறது எனலாம்.

ஐக்கிய ராச்சியம் (பிரிட்டன்) நாட்டில் சேம்பர்லின், சர்ச்சில், ஃபுட் குடும்பங்களிலிருந்து அரசியல் வாரிசுகளாக வந்தவர்கள் உண்டு. ஜப்பான், அயர்லாந்து, இஸ்ரேல் ஆகிய நாடுகளும் இதில் இணைகின்றன.

தென்கிழக்கு ஆசிய நாடாகிய பிலிப்பைன்ஸ் வாரிசு அரசியல் மேலோங்கியிருக்கும் ஜனநாயக நாடு. தற்போதைய நிலவரப்படி மாகாண ஆளுநர்களில் 80%  பேர், அதிக அளவுக்கு அரசியல் வாரிசுகளைக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களில் 74%, மேயர்களில் 75%., மேலவையில் 12.5% பேர் அரசியல் தலைவர்களின் நேரடி வாரிசுகளாகவோ, நெருங்கிய உறவினர்களாகவோ இருப்பவர்கள்தான்.

படம்: பெனாசிர் பூட்டோ குடும்பம்

தென்கிழக்கு ஆசியாவின் தாய்லாந்து, சிங்கப்பூர் (லீ குவான் யூ குடும்பம்) ஆகியவையும் பரம்பரையினரின் அரசியல் ஊன்றியிருக்கும் நாடுகள்தான். தெற்கு ஆசியாவின் பாகிஸ்தான் (பூட்டோ, ஷெரீப் உள்பட பல தலைவர்களது குடும்பத்தினர்), வங்கதேசம் (ஷேக் ஹசீனா மற்றும் பலரது குடும்பத்தினர்), லத்தீன் அமெரிக்காவின் உருகுவே (பேடைல் குடும்பம்) ஆகியவையும் குறிப்பிடத்தக்கவை.

ஆப்பிரிக்காவின் சிரியா ஒரு குடியரசு, ஆனால் 1971 முதல் 2024 வரையில் பஷல் அல் அசார் குடும்பத்தின் பிடியில்தான் அந்த நாடு இருந்தது. நடைமுறையில் ஒரு சர்வாதிகார ஆட்சி. நிர்வாகத்தின் ராணுவம், உளவுத்துறை உள்ளிட்ட பல மற்ற பல கிளைகளிலும் அந்தக் குடும்பத்தின் உறவினர்கள் ஆதிக்கம் செலுத்தினர். சென்ற ஆண்டு டிசம்பரில் நடந்த கிளர்ச்சியைத் தொடர்ந்து தற்போது ஒரு இடைக்கால அரசின் பொறுப்பில் சிரியா இருக்கிறது. ஜனநாயகத்தை நோக்கிச் செல்லும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அடையாள அரச குடும்பங்கள்

பிரிட்டனில் ஒரு பாரம்பரிய அடையாளமாக அரசுத் தலைவர் ஆசனத்தில் வின்ட்ஸர் அரச குடும்பத்தினர்தான் தலைமுறை தலைமுறையாகத் தொடர்வார்கள். ஆனால் நாட்டின் ஆட்சியதிகாரத்தில் அவர்களுக்கு எந்தப் பிடிமானமும் இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்றத்திற்கும், அதன் மூலம் அமைக்கப்படும் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்திற்கும்தான் அரசியல் அதிகாரங்கள். ஜப்பானிலும் இப்படித்தான். அங்கே பரம்பரையாக யமோடோ குடும்ப வாரிசுகள்தான் அரசுத் தலைமையாக வருவார்கள், ஆனால் அரசியல் அதிகாரம் நாடாளுமன்ற முறை அரசாங்கத்திற்கே.

படம்: மத்திய கிழக்கு நாடுகள்

மத்திய கிழக்கில் உள்ள பஹ்ரைன், சவுதி அரேபியா, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், புரூனே, எஸ்வதனி, கத்தார் ஆகிய நாடுகளில் இன்னமும் பரம்பரை முடியாட்சியே நடக்கிறது. தேர்தல், நாடாளுமன்றம், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஏற்பாடெல்லாம் கிடையாது. ஆகவே, அங்கெல்லாம் குடும்ப அரசியல், வாரிசு அரசியல் என்ற விமர்சனங்களுக்கு இடமில்லை. குடும்பமும், வாரிசுகளும்தான் அரசியல். அவர்களுக்குள் அவ்வப்போது மோதல்கள் நடக்கும்.

இந்த விவரங்கள், பெரும்பாலான நாடுகளில் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சிப் பொறுப்புகளுக்கும் கட்சிப் பதவிகளுக்கும்‘ குடும்ப வாரிசுகள் வருகிறார்கள் என்றாலும், இந்தியா உள்ளிட்ட தேற்காசிய நாடுகளில் மிக அதிகமாக வருகிறார்கள் என்ற நிலவரத்தைக் காட்டுகின்றன.

சுருங்கிய எல்லை

இந்தியாவில் நெடுங்காலமாகவே தனிமனிதர்களைச் சார்ந்ததாகவே அரசியல் கட்டமைக்கப்பட்டு வந்திருக்கிறது.  கட்சியின் கோட்பாடுகளையும் கொள்கைகளையும் விட குறிப்பிட்ட தலைவர்களின் புகழ், குடும்பத்தின் பாரம்பரியம், சமூகப் பின்னணி, அதன் அடிப்படையிலான ஆதரவுத்தளம், பண பலம் ஆகியவைதான் அரசியல் தாக்கத்தைத் தீர்மானிப்பவையாக இருக்கின்றன. இந்திய அரசமைப்பு சாசனம் உறுதிப்படுத்துகிற ஜனநாயக வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்கிற பெரும்பாலான கட்சிகள், அந்த ஜனநாய மாண்பை வெறும் தேர்தல் பங்கேற்புடன் அணைபோட்டு வைத்திருக்கின்றன. வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்குப் பதிவு எந்திரத்தில் பொத்தானை அழுத்துவதோடு ஜனநாயக் கடமையை முடித்துவிடப் பழக்கியிருக்கின்றன.

ஜனநாயகத்தில் தேர்தலுக்கு உள்ள மையமான இடம் மறுக்க முடியாதது. ஆனால் சுட்டுவிரலில் மை தீட்டிக்கொள்வது மட்டுமேயாக அது சுருங்கிவிடுவதில்லை. அந்த விரலை நீட்டி விமர்சிப்பது, கட்டை விரலை உயர்த்திக் கேள்வி கேட்பது என்றெல்லாம் ஜனநாயகத்தின் உயிர்நிலை இருக்கிறது. ஆனால்  உறுப்பினர்களிடையேயும் சரி, பொதுமக்களிடையேயும் சரி இந்த உயிர்நிலையை வளர்த்து உறுதிநிலையாக்குவதற்குக் கட்சிகள் முயல்வதில்லை. விதிவிலக்காக இருப்பவை இந்திய அளவில் இடதுசாரி கட்சிகள்.

இந்தியத் தேர்தல் ஆணையம் கூட, 100 சதவீத வாக்குப் பதிவு என்ற நோக்கத்தை அடைவதில் காட்டுகிற அக்கறையை, இந்த ஜனநாயக மாண்புகள் பற்றிய கல்வியைப் பரப்புவதில் காட்டுவதில்லை. சுயேச்சையான அரசமைப்பு சாசன நிறுவனம் என்ற முறையில் இதை ஆணையம் தானாக முன்வந்து செய்திருக்க வேண்டும். ஆனால், நாட்டின் விடுதலைக்குப் பின் குடிமக்கள் தட்டுத்தடுமாறி தாங்களாகவேதான் இதைக் கற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. அந்தக் கற்றலின் எலலை வாக்குச் சாவடியோடு நின்றுவிட்டது ஒரு சோகம்.

ஜனநாயகப் பயிற்சி பெறாத மக்கள் நன்கறியப்பட்ட குடும்பப் பெயர்களோடு அரசியல் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் இணைத்துக்கொள்கிறார்கள். பழைய நிலவுடைமைச் சமுதாயத்தின் மிச்சமே இந்த விசுவாசம். குறிப்பிட்ட குடும்பங்களுடைய நிதி வளமும் கூட வாரிசுகளுக்கு வழியமைத்துக் கொடுக்கிறது. கட்சிக்குள்ளே பொறுப்புகள் தருவதாகவும், தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்துவதாகவும் மட்டுமல்லாமல், குறிப்பிட்ட வட்டாரத்தில் குறிப்பிட்ட குடும்பத்திற்கு இருக்கக்கூடிய செல்வாக்கைப் பயன்படுத்திக்கொள்வதாகவும்  இந்தக் குடும்ப அரசியல் கையாளப்படுகிறது. தேர்தல் காலத்தில் அந்தக் குறிப்பிட்ட குடும்பத்தின் வீட்டிற்கு எல்லாக் கட்சிகளின் தலைவர்களும் போய் மரியாதை செலுத்துவதைப் பார்க்கலாம். ஆளுங்கட்சியினரின் ஏற்பாட்டில், வட்டாரம் சார்ந்த வளர்ச்சிப் பணிகளுக்கான ஒப்பந்தங்கள் அந்தக் குடும்பங்களைச் சேர்ந்தோருக்கு வழங்கப்படுவதையும் பார்க்கலாம்  அந்தக் குடும்பம் ஏதேனும் ஒரு கட்சி சார்ந்ததாக அறியப்பட்டிருந்தால் மட்டுமே இது தவிர்க்கப்படும்.

நம்ம ஆள்

இதில் கலாச்சாரப் பரிமாணங்களும் இருக்கின்றன. “உனக்கு என்ன தெரியும்” என்பதற்கு மாறாக, “உனக்கு யாரைத் தெரியும்” என்பதாக, “சட்டம் என்ன சொல்கிறது” என்பதற்கு மாறாக, “அவர் என்ன சொல்கிறார்” என்பதாக தனிமனிதர்கள் அல்லது அவர்களது குடும்பங்கள் மீதான அரசியல் மதிப்பு கட்டமைக்கப்பட்டு வந்திருக்கிறது. பல்வேறு காரணங்களால், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ அமைப்புகள் மீது உருவான அவநம்பிக்கைகளும் இந்தத் தனிமனித/தனிக்குடும்ப நம்பிக்கைகளுக்கு இட்டுச் செல்கின்றன. எடுத்துக்காட்டுக்கு ஒரு சிறிய காட்சி: பிள்ளையின் கல்வி அல்லது வேலைக்காக சாதிச் சான்றிதழ் கேட்டு அலுவலகத்திற்கு நடையாய் நடந்து நொந்து போகும் ஒருவர், அவரது ஊரின் குறிப்பிட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி அந்தச் சான்றிதழ் கிடைக்கச் செய்கிறபோது, தன்னோடு தன்னுடைய வாரிசுகளின் விசுவாசத்தையும் அவருக்கு எழுதிக் கொடுத்துவிடுகிறார்.

அதிகார மையங்களில் தன்னுடைய குடும்பத்தையோ, சமூகத்தையோ, ஊரையோ சேர்ந்த ஒருவர் இருப்பதில் ஆதரவான வாய்ப்புகள் அமைவதாகக் கருதுகிறார்கள். “நம்ம ஆள்” என்ற அடையாளத்துடன் அவரிடமிருந்து பெறக்கூடிய எதிர்கால ஆதாயங்களுக்காக நிகழ்கால ஆதரவை அவருக்கு வழங்குகிறார்கள்..‘

இந்த “நம்ம ஆள்” கண்ணோட்டம் சாதி மதம் சமூகக் குழு சார்ந்ததாக இருக்கிறது. அது, ஏற்கெனவே உள்ள இத்தகைய சமூகக் கட்டமைப்புகளை வலுப்படுத்துகிறது. அரசியல் களத்தில் முன்னுக்கு வருகிற ஒரு “நம்ம ஆள்” தனது சமூகத்தினரிடமிருந்து ஆதரவைப் பெறுகிறார், பதிலுக்கு அவர்கள் தங்களை “நம்ம ஆள்” கவனித்துக்கொள்வார் என்று எதிர்பார்க்கிறார்கள். வலுவான ஆணாதிக்கக் கட்டமைப்பையும் படிநிலை அமைப்பையும் கொண்ட கலாச்சாரங்களில், அதிகார பீடங்களுக்குப் பணிந்து போவது வழக்கமாக இருக்கிறது. அரசியல்வாதிகள், குறிப்பாக வாரிசுகளாக வந்தவர்கள், தங்களை சமூகத்தின் விசுவாசத்திற்குத் தகுதியானவர்களாகவும், கனிவான புரவலர்களாகவும் முன்னிறுத்தி இந்த நிலைமையைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

சொந்த ஆதாயங்களுக்காக அரசியலைப் பயன்படுத்துவது வெளிப்படையாக விமர்சிக்கப்படுகிறது. ஆனாலும், அரசியலுக்கு வருவதே சொந்த ஆதாயங்களுக்காகத்தான் என்று பொதுவாக ஏற்கப்பட்ட போக்காக இருக்கிறது. நெடுங்காலமாகக் களமாடுகிற ஒரு நேர்மையான அரசியல்வாதியிடம், “இத்தனை வருசமா அரசியல்ல இருக்கீங்க, இன்னுமா ஒரு சொந்த வீடு கூட வாங்கலை,” என்று கேட்கப்படுகிறது. பிழைக்கத் தெரியாதவர் என்று முத்திரை குத்தப்படுகிறது. வாரிசு முறையோடு இணைந்த சமூக உறவுகள் சார்ந்த அரசியல் சூழல் இப்படிப்பட்ட கண்ணோட்டங்களுக்கு அடிப்படையாக இருக்கிறது.

நீண்டகால, நிலையான மாற்றங்களைப் பின்னுக்குத் தள்ளி, உடனடி ஆதாயங்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கும் மனப்போக்கும் இதற்கு சாதகமாக இருக்கிறது. சொந்தபந்தங்களுக்கு, சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு, ஊர்க்காரர்களுக்கு அரசாங்கத்தின் திட்டங்களின் உடனடிப் பலன்கள் கிடைக்க ஏற்பாடு செய்துவிட்டு (இலவச விநியோகங்கள் முதல், பணி ஒப்பந்தங்கள் வரையில்), இதுவே போதுமென்று அவர்கள் பூரிப்படைந்திருக்க, மேலே வந்தவர்கள் நிலையான ஆதாயங்கள் வந்து பாய்வதற்கு வழி செய்துகொள்வார்கள்.

குடும்ப உறவு முறை

இந்தியா உட்பட ஆசிய நாடுகளில் காணப்படும் தாய்வழி – தந்தைவழி உறவினர்களை உள்ளடக்கிய விரிவான குடும்ப உறவு அமைப்புகளும் வாரிசு அரசியல் ஆழமாக வேரூன்றுவதற்கு முக்கியக் கலாச்சாரக் காரணியாகின்றன. அப்பா, அம்மா, அவர்களுக்குப் பிறந்த அண்ணன் தம்பிகள், அக்காள் தங்கைகள், பெரியப்பா சித்தப்பா பெரியம்மா சின்னம்மா வழி சகோதரர்கள், சகோதரிகள், மாமன்–அத்தை வழி மச்சான்கள் மச்சினிகள், பிள்ளைகளுக்கும் இந்த உறவின் முறையினருக்கும் பிறக்கிற சொந்தங்கள் என்று எத்தனை உறவுகள்! அத்தனை உறவுகளையும் குறிப்பிடும் சொற்களே உண்டு! இத்தனை உறவுகள் சேர்ந்தாலே ஒரு சமூகமாகிவிடுகிறதே!

இந்த நாடுகளின் குடும்ப அரசியல் பாரம்பரியத்திற்கு இதுவொரு முக்கியமான இணைப்புச் சங்கிலி (தொப்புள் கொடி உறவு!). கோட்பாடுகளில் காலூன்றாத அரசியல் தலைவர்கள் கட்சிப் பதவிகளில் நியமிக்கப்படும் தங்களுடைய குடும்ப உறுப்பினர்கள், வெளியாட்களை விட அதிக விசுவாசமாகவும், நம்பகமாகவும் இருப்பார்கள் என்ற வலுவான எண்ணத்துடன் இருக்கிறார்கள். இப்படி பதவிகளும் அதிகாரங்களும் குடும்பத்திற்கு உள்ளேயே சுழலும்போது அது குடும்பத்தின்/சமூகத்தின்/சாதியின் ஒட்டுமொத்தப் பிணைப்பை வலுப்படுத்துகிறது.

இத்தகைய பாரம்பரிய சமூக உறவுகள் ஆதிக்கம் செலுத்தும் சூழலைப் பயன்படுத்திக்கொள்வதில், இந்தியாவில் பல கட்சிகளும் முனைப்புக் காட்டுகின்றன என்றாலும்,  இன்று வேறு எந்தக் கட்சியையையும் விட, பாஜக ஒரு “நிபுணத்துவம்” பெற்றிருக்கிறது என்று சொல்லலாம். அரசியல் மதிப்பீட்டாளர்கள் இதனை “சோசியல் இன்ஜினீயரிங்” (சமூக உத்தி) என்ற சொல்லால் அடையாளப்படுத்துகிறார்கள்.  ஜனநாயகத்திற்கும் ஜனநாயக இயக்கங்களுக்கும் சவாலாக இருக்கும் “அடையாள அரசியல்” நிலைமையோடு சம்பந்தப்பட்ட உத்தி இது. ஏற்கெனவே மற்ற கட்சிகள் தங்களின் பிடியில் வைத்திருக்கிற பெரிய சாதிகளுக்கு உள்ளே இருக்கும் துணைச் சாதிகளையும் உட்பிரிவுகளையும் சேர்ந்தவர்களை வட்டார அளவிலான கட்சிப் பதவிகளில் அமர வைப்பதும், அதன் மூலம் அதிகார ஏற்பாடுகளோடு அவர்களுக்குத் தொடர்புகளை ஏற்படுத்தித் தருவதுமான வழிமுறைகளை வெற்றிகரமாக பாஜக தலைமை கையாள்கிறது. மற்ற கட்சிகள் தவறவிட்ட இடம் இது.

தனது ஊரில் பெரிதாகக்  கண்டுகொள்ளப்படாமல் சுற்றிவந்த ஒருவரை வட்ட,  மாவட்டப் பொறுப்புகளில் நியமிக்கிறபோது, அதனால் கிடைக்கிற வாய்ப்புகளில் திளைக்கிற அவர் தன்னுடைய இனக்குழுவின் ஆதரவைத் திரட்டித் தருகிறவராக மாறுகிறார்.  நகரச் சுவர்களில் பெரிய அளவுப் புகைப்படங்களோடு புதிதாக ஒட்டப்படும் இப்படிப்பட்ட நியமன அறிவிப்புகளைக் காணுகிறபோது இந்த சோசியல் இன்ஜினீயரிங் என்ற பதம்தான் நினைவிலாடுகிறது.

குடும்ப அரசியல் நல்லதா, கெட்டதா? குடும்பம் அரசியலுக்கு வரலாமா கூடாதா?

[அடுத்த கட்டுரையுடன் நிறைவடையும்]

பகுதி-1

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share