இயக்குனர் கதிர் இயக்கிய காதல் தேசம் படத்தில் நாயகனாக அறிமுகம் ஆனவர் அப்பாஸ். அவர் நண்பர் ஒருவருக்கு வாய்ப்புக் கேட்க வர, அவரே நடிகரான சம்பவம் அது. முதல் படத்திலேயே ரொமான்டிக் ஹீரோக்களில் ஒருவராக பிரபலமானார். பயங்கர பிஸியானார்.
அவரது கால்ஷீட் கொடுக்க முடியாமல் போனதால் அப்பாஸ் இழந்த படங்களைக் கேட்டால் ஆடிப் போய் விடுவீர்கள், காதலுக்கு மரியாதை , மற்றும் ஜீன்ஸ்.!
இதற்கெல்லாம் கால்ஷீட் தராமல் அவர் ஓடி ஓடி நடித்த படங்களின் பெயரைக் கேட்டால் மேலும் ஆடிப் போவீர்கள்.
ஜாலி, இனி எல்லாம் சுகமே, ஆசை தம்பி . ஒரு படம் கூட ஓடல.
ஆனால் தெலுங்கில் டப் செய்யப்பட்ட காதல் தேசம் கை கொடுக்க, அதன் பின்னர் நிறைய தமிழ் தெலுங்கு மலையாள படங்களில் நடித்தார்.ஆனால் சோலோ ஹீரோவாக அல்ல.
லிங்குசாமியின் முதல் படமான ஆனந்தம் படத்தில் அவரும் ஒரு ஹீரோ. மின்னலே படத்திலும் ஹீரோவுக்கு அடுத்த ஒரு கேரக்டர். கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தில் ஹீரோக்களில் ஒருவர் . அப்படியே ஏறி அல்லது இறங்கி கமலின் ஹேராம், ரஜினியின் படையப்பா இவற்றில் ஒரு கேரக்டர். பம்மல் சம்மந்தம் படத்தில் ஒரு கேரக்டர், விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தில் அப்பாஸ் ஆகவே ஒரு சின்ன கேரக்டர் . அதே போல கோ படத்தில் ஒரு ரோல்.
அப்பாஸ் தமிழில் கடைசியாக நடித்தது 2014 இல் வந்த ராமானுஜன் படத்தில்தான் . அபபாஸ் நடித்த டாய்லட் கிளீனர் விளம்பரம்தான் அவரை கடைசியாக தமிழ் ரசிகர்கள் பார்த்தது.
எல்லா மொழிகளும் கை விட, நியூசிலாந்து – ஆக்லாந்துக்கு போய் பெட்ரோல் பங்குகள் கட்டுமான நிறுவனங்களில் எல்லாம் வேலை பார்த்து, அப்புறம் மோட்டிவேஷனல் ஸ்பீக்கராக உயர்ந்தார்.
இந்த நிலையில் பதினான்கு வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க தமிழுக்கே வருகிறார் அப்பாஸ்
.ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்க, , மரியா இளஞ்செழியன் இயக்கும் படம் ‘ஹேப்பி ராஜ்”’
“சமூக வலைதளங்களில் உலாவும் எதிர்மறை உணர்வுகளால், நம் இயல்பு வாழ்க்கையில் மனக்குழப்பங்கள் சூழப்பட்ட இன்றைய உலகில், அந்த இருளைப் போக்கி வெளிச்சத்தைத் தருவதற்கான ஓர் உணர்வு தேவைப்படுகிறது . அதுதான் இந்தப் படம் . முழுக் கதையிலும் ‘ஹேப்பி’ என்ற வார்த்தை நூற்றுக்கும் மேற்பட்ட முறை ஒலிக்கும்; அது வெறும் சொல் அல்ல, நம்பிக்கையூட்டும் மந்திரம் . மனதை நிம்மதியாக்கும். கோபம், புன்னகை, மகிழ்ச்சி அனைத்தும் நம் கையில் தான் உள்ளது என்பதை படம் உணர்த்தும்.”என்கிறார் இயக்குனர். இந்தப் படத்தில்தான் மீண்டு(ம்) வருகிறார் அப்பாஸ்.
”உன்னைக் காண வில்லையே நேற்றோடு…” என்று பாடப்படுவதற்கான தேவை இல்லாத அளவுக்கு, பிஸியாகட்டும் அப்பாஸ்.
— ராஜ திருமகன்
