சிலிண்டர் விஷயத்தில் மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீட்டு உபயோக எல்பிஜி (LPG) சிலிண்டர் பயனருக்கும் பயோமெட்ரிக் இ-கேஒய்சி (eKYC) முறையை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது. ஆரம்பத்தில், இது மானியம் கோருபவர்களுக்கு மட்டுமே இருந்தது. ஆனால் இப்போது, பதுக்கலைத் தடுக்கவும் நியாயமான விநியோகத்தை உறுதி செய்யவும் இது அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதற்கான காரணம் என்ன?
இந்தியா இப்போது கடுமையான எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் நெருக்கடியில் உள்ளது. முன்பு, நமது எரிவாயு இறக்குமதியில் 90%க்கு ஹார்முஸ் ஜலசந்தியே முக்கிய பாதையாக இருந்தது. இருப்பினும், தற்போது நடந்து வரும் மேற்கு ஆசியப் போர் இந்தப் பாதையை ஏறக்குறைய மூடிவிட்டது. இது பீதியுடன் பொருட்களை வாங்குவதற்கும், பற்றாக்குறை இருப்பதாக நினைப்பதற்கும் வழிவகுத்துள்ளது. இதன் விளைவாக, தரவுத்தளத்தைச் சீரமைக்கவும் கள்ளச் சந்தையைத் தடுக்கவும் அரசாங்கம் இ-கேஒய்சி முறையைப் பயன்படுத்துகிறது.
உங்கள் இ-கேஒய்சி சரிபார்ப்பை முடிப்பது எப்படி?
இதற்கு நீங்கள் சிலிண்டர் டீலர் அலுவலத்துக்குச் செல்ல வேண்டியதில்லை. உங்கள் தொலைபேசியைப் பயன்படுத்தலாம். உங்கள் கேஸ் நிறுவனத்தின் செயலியை (இந்தியன் ஆயில் ஒன், பாரத்கேஸ் அல்லது ஹலோ பிபிசிஎல் போன்றவை) பதிவிறக்கம் செய்ய வேண்டும். அல்லது ஆதார் ஃபேஸ்ஆர்டி செயலியைப் பதிவிறக்கம் செய்யலாம்.
கேஸ் செயலியைத் திறந்து, “e-KYC” பகுதிக்குச் சென்று, ஃபேஸ்ஆர்டி கருவியைப் பயன்படுத்தி உங்கள் முகத்தை ஸ்கேன் செய்ய வேண்டும். பச்சை வட்டம் தோன்றியவுடன், உங்கள் தரவுகள் சரிபார்ப்புக்கு அனுப்பப்படும்.
நேரடியாக சென்று அப்டேட் செய்வது எப்படி?
இதற்கு உங்கள் சிலிண்டர் விநியோகஸ்தரை அணுக வேண்டும். உங்கள் ஆதார் அட்டை மற்றும் கேஸ் சிலிண்டர் புத்தகத்தை உங்கள் உள்ளூர் டீலரிடம் எடுத்துச் செல்லுங்கள். அவர்கள் கைரேகை ஸ்கேனரைப் பயன்படுத்தி இந்தச் செயல்முறையை முடிப்பார்கள்.
குறிப்பாக, அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் மோதல்களால் ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் சுமார் 18 முதல் 22 நாட்களுக்கு மட்டுமே எரிவாயு கையிருப்பு உள்ளது. எனவே, இ-கேஒய்சி மூலம் சேமிக்கப்படும் ஒவ்வொரு சிலிண்டரும், உண்மையிலேயே உதவி தேவைப்படும் குடும்பங்களுக்கு உதவும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
