காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து மனு கொடுத்துள்ளனர். Government employees meet Chief Minister Stalin
களப்பணியாளர்களின் பணி சுமையை குறைக்க வேண்டும், தரமிறக்கப்பட்ட குறு வட்ட அளவர் பதவியை மீள வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும்,
துணை ஆய்வாளர், ஆய்வாளர் ஊதிய முரண்பாட்டை களைந்திட வேண்டும், புற ஆதார முறையில் உரிமம் பெற்ற நில அளவர் நியமனத்தினை முற்றிலும் கைவிட வேண்டும், உயர் அலுவலர்களின் அதிகாரங்களை பறிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், காலமுறை ஊதியத்தில் புல உதவியாளர்களை நியமனம் செய்திட வேண்டும், நீதிமன்ற பயிற்சி வழங்கிட வேண்டும், புதிய நகர சார் ஆய்வாளர் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கம் வலியுறுத்தி வருகிறது.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து நில அளவர்கள் முதல் ஆய்வாளர்கள் வரையிலான அரசு ஊழியர்கள் சுமார் 1000 பேர் இன்று (ஜூலை 3) சென்னை வந்தனர்.

’பெருந்திரள் முறையீடு’ என்ற பெயரில் இச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் அண்ணா குபேரன், தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.ரவி ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். இந்த கோரிக்கை மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தொடர்ந்து, சேப்பாக்கத்தில் உள்ள நிலவரித் திட்ட இயக்க அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட நில அளவை அலுவலர்கள் ஒவ்வொரும் தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை முறையிட்டனர். Government employees meet Chief Minister Stalin