மக்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வரும் பொருளாதார கொள்கையை கண்டித்து, வரும் ஜூலை 9-ஆம் தேதி மத்திய, மாநில அரசு ஊழியர்கள் 25 கோடி பேர் பங்கேற்கும் ஸ்டிரைக் நடைபெற இருக்கிறது. இந்த ஸ்டிரைக் மிக முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசு ஊழியர்கள். Government Employees announced strike
இதுகுறித்து சிஐடியு தேசிய துணை தலைவர் செளந்தரராஜனை தொடர்பு கொண்டு நாம் பேசினோம்.
“மத்தியில் ஆளும் பாஜக அரசு மக்களுக்கு எதிரான கொடுமையான பயங்கரமான பொருளாதார கொள்கையை கொண்டு வருகிறது. இதனால் அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், உழைக்கும் மக்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்படக்கூடிய நிலை ஏற்படும்.

ஒரு பக்கம் விலைவாசி உயர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால், விலைவாசி உயர்வை சமாளிக்ககூடிய வகையில் தொழிலாளர்களுக்கு போதிய வருமானம் கிடைப்பதில்லை. தற்போது 29 மோசமான தொழிலாளர் சட்டத்திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இதனால், தொழிலாளர்களின் வேலை நேரம் அதிகமாக்கப்படுகிறது. 100 தொழிலாளர்கள் வேலை செய்யக்கூடிய நிறுவனங்களில் தொழிலாளர் சட்டங்கள் பொருந்தாது, 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்யக்கூடிய நிறுவனங்களில் தான் தொழிலாளர் சட்டங்கள் பொருந்தும் என்று அறிவித்துள்ளார்கள். இது போன்ற சட்டங்கள் தொழிலாளர்களின் உரிமைகளை நசுக்கக்கூடியதாகும்.
விவசாயிகளுக்கு எதிரான சட்டத்திருத்தங்களை வாபஸ் வாங்கவில்லை. அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையும் கிடைப்பதில்லை. சொந்த நிலம் வைத்துள்ள விவசாயிகளை நிலத்தை விட்டு வெளியேறும் வகையில் நெருக்கடி கொடுக்கிறார்கள்.

டூ விலர், கார், பஸ் மற்றும் கனரக வாகனங்கள் சாலைகளில் பயணிக்க சாலை வரி வசூலிக்கிறார்கள். புதிய வாகனங்களை பதிவு செய்யும் போது மாநிலத்திற்கு ஏற்றார் போல் 13 சதவிகிதம் முதல் 25 சதவிகிதம் வரையில் வசூல் செய்கிறார்கள்.
இதுபோக சாலையை பராமரிக்க பசுமை வரி என்றும், ஆண்டுதோறும் எஃப்.சி என ஆர்டிஓ ஆபிஸ் மூலம் பல லட்சம் கோடி வசூல் செய்கிறார்கள். ஆனால், சாலையில் பயணிக்க சுங்கச்சாவடி மூலமாகவும் கொள்ளையடிக்கிறார்கள்.
அதேபோல, அரசு மருத்துமனையில் கட்டணமுறையை அமல்படுத்தி வருகிறார்கள். இப்போதே காப்பீடு இல்லாதவர்களுக்கு சிகிச்சை கொடுக்காமல் அரசு மருத்துவமனைகளில் வெளியே தள்ளுகிறார்கள். கல்வி நிறுவனங்களும் வேகமாக கட்டணமயமாகி வருகிறது.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை சர்வதேச கச்சா எண்ணெய் விலையை ஒப்பிடும்போது மிக மிக அதிகமாக இருக்கிறது. அதனால் பெட்ரோல், டீசல் விலையை ஒரு லிட்டருக்கு 40 ரூபாய் குறைக்க வேண்டும். ஆனால், இவர்கள் கண்ணை மூடிக்கொண்டு நினைக்கும் போதெல்லாம் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதால் விலைவாசி விண்ணை முட்டுகிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.
அடித்தட்டு கிராமப்புற கூலி விவசாயிகளை பாதிக்கக்கூடிய வகையில் 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலையையும் ஊதியத்தையும் குறைக்கக்கூடிய போக்கில் இறங்கியுள்ளனர். பொது விநியோக திட்டத்தில் மானியம் குறைக்கப்படுகிறது.
மேலும், அரசு ஊழியர்களை பாதிக்கும் அளவிற்கு காலிப்பணியிடங்களை நிரப்பாமல் ஒப்பந்த அடிப்படையிலேயே பணிகளை நியமிக்கிறார்கள். இதனால் இளைஞர்கள் வேலை இல்லா திண்டாட்டத்தில் தவிக்கிறார்கள்.
பொதுத்துறையை தனியாரிடம் தாரை வார்ப்பதாலும், அரசு துறைகளில் ஆட்களை ஒப்பந்த முறையில் அனுமதிப்பதாலும் நாட்டினுடைய பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. பெரும்பாலான பெரும் துறைமுகங்கள் தனியார்மயமாக்கப்பட்டதால், போதைப்பொருள் கடத்தல் தடையில்லாமல் இந்தியாவில் ஊடுருவி வருகிறது.

இதுபோன்ற பொருளாதார கொள்கைகள் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தான் சாதமாக இருக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் போன்ற ஆட்கள் தான் மோசமான பொருளாதார கொள்கைகளை கடைபிடித்து வருகிறார்கள்.
பாஜக அரசின் இந்த மோசமான பொருளாதார கொள்கைகளை கண்டித்து நாட்டின் இறையாண்மையையும் மக்கள் நலனையும் கருதி அகில இந்திய அளவில் கடந்த மே 25-ஆம் தேதி ஸ்டிரைக் அறிவித்திருந்தோம்.
அப்போது இந்தியா – பாகிஸ்தான் மோதல் நடைபெற்று வந்ததால் ஸ்டிரைக் ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில், ஜூலை 9-ஆம் தேதி ஸ்டிரைக் நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த ஸ்டிரைக்கில் இந்தியாவில் உள்ள மத்திய, மாநில அனைத்து துறைகளை சார்ந்த 25 கோடி அரசு ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதனால் உற்பத்தி இழப்பு ஏற்படும். அரசு ஸ்தம்பிக்கும். இதற்கெல்லாம் காரணம் மத்திய பாஜக அரசு தான். உலகத்தில் எங்கும் நடக்காத வகையில் இந்த ஸ்டிரைக் நடைபெறும்” என்று செளந்தரராஜன் தெரிவித்தார்.