ஆதவ் ஆர்ஜுனாவுக்காக வாக்கு சேகரித்து நடைபெற்ற பொது கூட்டத்தில் பெண்கள் மீது கண்ணாடி பாட்டில் துண்டுகளால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்கிறது. அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதனால் வில்லிவாக்கம் தொகுதியில் தங்கியிருந்து தேர்தல் வேலைகளை கவனித்து வருகிறார். வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கிறார்.
இன்று (மார்ச் 31) வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜூனாவை ஆதரித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத், ஆதவ் அர்ஜுனாவை ஆதரித்து பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது மேடையில் இருந்த ஆதவ் அர்ஜுனாவிடம், கூட்டத்திலிருக்கும் பெண்கள் மீது கண்ணாடி பாட்டிலை உடைத்து அதன் துண்டுகளை கொண்டு அடிக்கிறார்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனால் நாஞ்சில் சம்பத் பேசிக்கொண்டிருந்த போது இடைமறித்து பேசிய ஆதவ் அர்ஜூனா, “என்ன அநியாயம் நடக்கிறது. கண்ணாடி பாட்டிலை வைத்து அடிப்பது தான் ஜனநாயகமா? ஒரு பெண்ணின் ஷோல்டரில் கண்ணாடி பாட்டிலை வைத்து அடித்திருக்கிறார்கள். இது திமுகவின் சதித்திட்டம். இதற்கு எதிராக நாங்கள் குரல் கொடுப்போம். இன்று இரவே அவர்கள் கைது செய்யப்பட வேண்டும். ஸ்டாலின் சார் எல்லாத்தையும் நிறுத்துங்கள். நாங்கள் பொறுமையாக இருந்துகொண்டிருக்கிறோம்.

எங்களுடைய பெண்கள் மீது கை வைத்தால் சும்மா இருக்கமாட்டோம். இன்று இரவே கண்ணாடி பாட்டிலால் அடித்தவரை காவல்துறை கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் ஆதவ் அர்ஜூனா இங்கேயே உட்காருவேன்.
கரூரில் தொடங்கினீர்கள். இன்று கண்ணாடி பாட்டிலை வைத்து அடிப்பதா? இதற்கு பதில் சொல்லவில்லை என்றால், கைது செய்தாலும் இங்கேயே உட்காருவோம்” என்று கண்டனம் தெரிவித்தார்.
