இந்தியாவில் இளைஞர்களை புரட்சியில் ஈடுபட தூண்டும் வகையில் சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு பின்னர் நீக்கிய தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று நவம்பர் 21-ந் தேதி ரத்து செய்துள்ளது.
கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி தவெக தலைவர் நடிகர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர்; இவர்களில் 13 பேர் பிஞ்சு குழந்தைகள்.
கரூர் துயர சம்பவத்தைத் தொடர்ந்து தவெக தலைவர்கள் ‘மவுனமாகினர்’; பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் தலைமறைவாக தப்பி ஓடினர்.
அந்த சூழலில் தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா செப்டம்பர் 29-ந் தேதி அதிகாலையில் தமது X பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
அதில், ” என் வாழ்வின் மிகப்பெரிய துக்கத்தைக் கடந்த இருபத்தி நான்கு மணிநேரமாக அனுபவித்து வருகிறேன்… இந்த மரணங்கள் என் நெஞ்சை இன்னும் உலுக்கிக்கொண்டு உள்ளது.
மரணத்தின் வலியையும், அந்த மக்களின் அழுகுரலையும் கடந்து செல்ல வழியின்றி தவித்துவருகிறேன். ஒரு மரணத்தின் வலியை ஐந்து வயது சிறுவனாக எனது தாயின் தற்கொலையில் பார்த்தபோதே உணர்ந்தவன். அந்த வலியை இப்போது எனக்கு மீண்டும் ஏற்படுத்தியுள்ளது இந்த மரணங்கள். இந்த நிமிடம் வரை இந்த துயர நிகழ்வைக் கடந்து செல்ல முடியாமலும், உறவுகளை இழந்து தவிக்கின்ற அந்த குடும்பங்களின் தவிப்புமே என்னை மீளாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு இந்த மரணங்கள். அந்த குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பும், வலியும் சராசரி மனிதனாகக் கடந்து செல்லும் மனநிலையில் என் மனம் இப்போது இல்லை.
இறந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அண்ணனாக, தம்பியாக, மகனாக, அந்த குடும்பங்களின் கனவுகளையும், நம்பிக்கையையும் சுமந்து செல்லும் ஒரு உறவாகவே எனது வாழ்க்கை பயணம் இருக்கும் என்பதை, இறப்பின் வலியை சிறுவயதிலேயே உணர்ந்த ஒருவனாக உறுதியுடன் கூறுகிறேன்.
துயரமும், துக்கமும் மட்டுமே என் மனதைச் சூழ்ந்திருக்கும் இவ்வேளையில், இழப்புகளைச் சந்தித்த என் உறவுகளுக்கு ஒரு உறவாய் என் எண்ணங்களை ‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும். சாலையில் நடந்து சென்றாலே தடியடி… சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டாலே கைது.. இப்படி ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறி போனால், மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி. இலங்கை, நேபாளம் போல புரட்சி வெடிக்கும்.. இளைஞர்களும், ஜென் இசட் தலைமுறையும் ஒன்றாக கூடி அதிகாரத்துக்கு எதிரான புரட்சியை உருவாக்கி காட்டினார்களோ அதேபோல் இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும்” என கூறியிருந்தார்.
ஆதவ் அர்ஜூனாவின் Gen Z புரட்சியைத் தூண்டும் இந்த பதிவு பெரும் சர்ச்சையானது. இதனால் இப்பதிவை உடனடியாக X பக்கத்தில் இருந்து ஆதவ் அர்ஜூனா நீக்கி இருந்தார்.
இதனிடையே ஆதவ் அர்ஜூனாவின் இந்த பதிவுக்காக சென்னை சைபர் கிரைம் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆதவ் அர்ஜூனா மனுத் தாக்கல் செய்தார்.
ஆதவ் அர்ஜூனாவின் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.
