விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆஷாவின் தீர்ப்புக்கு எதிராக சென்சார் போர்டு மேல்முறையீடு செய்துள்ளது. இதனால் ஜனநாயகன் படத்துக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்துக்கு U/A சான்றிதழ் வழங்க சென்சார் போர்டு முடிவு செய்திருந்தது. ஆனால் இப்படத்தில் மத உணர்வை புண்படுத்தும் காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக தணிக்கை குழு உறுப்பினர் புகார் கொடுத்தார். இதனால் ஜனநாயகன் திரைப்படம் மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று ஜனவரி 9-ந் தேதி ஜனநாயகம் படம் ரிலீஸ் செய்யப்படவில்லை.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜனநாயகன் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான KVN புரொடக்ஷன்ஸ் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பிடி ஆஷா, ஜனநாயகன் திரைப்படத்துக்கு U/A தணிக்கை சான்றிதழ் வழங்க மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்டார்.
ஆனால் நீதிபதி பிடி ஆஷாவின் இந்த உத்தரவுக்கு எதிராக சென்சார் போர்டு மேல்முறையீடு செய்துள்ளது. சென்சார் போர்டு சார்பாக மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா பெஞ்ச் முன்பாக ஆஜரானார். அப்போது, நீதிபதி பிடி ஆஷாவின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதனை தாம் பரிசீலனை செய்வதாக தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
சென்சார் சான்றிதழ் வழங்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆஷா பிறப்பித்தத்தரவுக்கு எதிராக சென்சார் போர்டு மேல்முறையீடு செய்துள்ளதால் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்துக்கு மீண்டும் சிக்கல் உருவாகி இருக்கிறது. இது விஜய் ரசிகர்களை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
