முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் லோகேஷ் தமிழ்செல்வன் இன்று (பிப்ரவரி 21) தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு முதல் அதிமுக ஆட்சியின் போது சட்டசபை சபாநாயகராக இருந்தவர் தனபால். இவரது மகன் லோகேஷ் தமிழ்செல்வனும் அதிமுகவில் செயல்பட்டவர்.
இந்நிலையில் இன்று அவர், தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார்.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நான் அதிமுகவில் மாநில இளைஞரணி இணை செயலாளராக பணியாற்றினேன். எனது அப்பா எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே அதிமுகவுக்காக உழைத்தவர். செங்கோட்டையனுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர்.
2025 ஜூலை மாதம் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது, கட்சியின் தலைமையோ அல்லது மற்ற முக்கியத் தலைவர்களோ நேரில் வந்து பார்க்கவில்லை. இது எங்கள் குடும்பத்திற்கு மிகுந்த மனவேதனையை அளித்தது. கட்சியில் எனது தந்தை போன்ற மூத்த தலைவர்களுக்கு முறையான மரியாதை அளிக்கப்படுவதில்லை. குறிப்பிட்ட ஒரு சிலரே கட்சியைத் தன்னிச்சையாக வழிநடத்துகின்றனர். எங்கள் அப்பாவுக்கு மரியாதையே கிடையாது.
செங்கோட்டையன் போல் பலர் வருத்தத்தில் இருக்கிறார்கள். அதிமுக மேல் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்.
நான் சிறு வயதில் இருந்தே விஜய்யின் ரசிகர். 6,7 மாதங்களாக யோசித்து இந்த முடிவெடுத்தேன். விஜய் வந்தால் எதாவது செய்வார் என்று மக்கள் நம்பிக்கையில் இருக்கிறார்கள்.
2026 பொதுத்தேர்தலில் விஜய் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பதவியேற்பார்” என்றார்.
அப்பா வரமாட்டார்… அவர் அதிமுக விசுவாசி என்றும் கூறினார்.
லோகேஷ் தமிழ்ச்செல்வன் போல, தலித் எழில்மலையின் மகளான கேத்ரின் எழில் மலை, இமானுவேல் சேகரனின் பேரன் சக்கரவர்த்தி, ரஜினி ரசிகர் மன்றம் மா.செ தி.நகர் அசோக் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த பாபுஜி கௌதம் ஆகியோரும் விஜய்யை சந்தித்து தவெகவில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
