நேபாள முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி (Sharma Oli) இன்று மார்ச் 28-ந் தேதி அதிகாலை கைது செய்யப்பட்டார். புதிய பிரதமராகப் பதவியேற்ற பாலேந்திர ஷா தலைமையிலான அரசின் உத்தரவின் பேரில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நேபாளத்தில் நடைபெற்ற ‘ஜென் இசட்’ (Gen Z) எனப்படும் இளைஞர்கள் போராட்டத்தை ஒடுக்கியதில் நடந்த வன்முறை மற்றும் உயிரிழப்புகள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கே.பி. சர்மா ஒலி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் சர்மா ஒலியுடன் சேர்த்து, அப்போதைய உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் கைது செய்யப்பட்டுள்ளார். நேபாளத்தின் தேசிய தண்டனைச் சட்டத்தின் (National Penal Code) கீழ் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
