சேலம் புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலாளர் பல்பாக்கி சி.கிருஷ்ணனை இன்று (டிசம்பர் 28) கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.’
தமிழக வெற்றிக் கழக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் முன்னிலையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பல்பாக்கி கிருஷ்ணன் நேற்று (டிசம்பர் 27) தவெகவில் தன்னை இணைத்து கொண்டார். இந்ந்நிலையில் அவரை அதிமுகவில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், சேலம் புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்பாக்கி சி. கிருஷ்ணன் Ex.MLA, (சேலம் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

