ADVERTISEMENT

தவெக ஒரு நாள் கூத்துக்கு தாங்காது – அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசம்

Published On:

| By Pandeeswari Gurusamy

விஜய்யின் தவெக பரிதாபமான நிலையில் உள்ளது. அதிமுக, திமுக கூட்டணி மட்டுமே களத்தில் நிற்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் பகுதியில் திமுக ஆட்சிக்கு எதிராக வீடு வீடாகச் சென்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் திமுகவோடு, தேமுதிக இணைந்த பின்னர், தேமுதிகவின் கொள்கை மற்றும் கடந்த காலங்களில் திமுக குறித்து விஜயகாந்த், பிரேமலதா, விஜய பிரபாகரன் பேசிய பேச்சுகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த பேச்சுகளை பார்த்தால் இந்த கூட்டணி சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT

திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற நோக்கில் லட்சிய கூட்டணியை அதிமுக அமைத்துள்ளது. திமுக ஆட்சியில் அத்தியாவசிய குடும்ப செலவு இரண்டு மடங்கு உயர்ந்து உள்ளது. கோடைக்கு பணம் கொடுத்துள்ளேன் என கூறுவது மக்களை ஏமாற்றும் நாடகம். பொய்யைச் சொல்லி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக திமுக செய்த வேலைதான், தேமுதிகவை வளைத்தது.

திமுக – தேமுதிக கொள்கை ரீதியிலான கூட்டணி அல்ல, கொள்ளை அடிப்பதற்கான கூட்டணி. திமுக தேமுதிகவை எப்படி வளைத்தது என்ற வரலாறு சமூக வலைதளங்களில் அழகாக வந்து கொண்டிருக்கிறது. கேப்டன் எதற்காக கட்சியை ஆரம்பித்தார், அதற்கு மாறாக கூட்டணி சேர்ந்து விட்டு பிரேமலதா சொல்லும் காரணத்தை ஏற்காத தேமுதிக தொண்டர்கள் அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.

ADVERTISEMENT

திமுக ஆட்சியில் ஒவ்வொரு தனி மனிதனும் பாதிக்கப்பட்டு உள்ளார். அரசு ஊழியர்கள் முதல் பட்டாசு தொழிலாளர்கள் வரை பாதிக்கப்பட்டு உள்ளனர். திமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டால் தான் தமிழக அரசின் நிதி நிலைமை மோசமானது. 75 ஆண்டுகாலமாக தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் உட்கட்டமைப்பு திட்டங்களுக்காக உலகவங்கியில் ரூ. 4.5 லட்சம் கோடி கடன் வாங்கிய நிலையில், ஸ்டாலின் அரசு 5 ஆண்டுகளில் 5 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளது.

மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும் என ஓபிஎஸ் பேசியது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “திமுகவை எதிர்த்து தான் எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கி அரசியல் செய்தார். அதே திமுக எதிர்ப்பில் தான் ஜெயலலிதா தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெற்று முதல்வரானார். அதிமுகவின் கொள்கைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பவர்களை சுயநலவாதிகள் என்றுதான் தமிழகத்தின் அரசியல் வரலாறு சொல்லும் என ஓ.பன்னீர் செல்வத்தை விமர்சித்தார்.

ADVERTISEMENT

நடிகர் விஜய்யின் தவெக பரிதாபமான நிலையில் உள்ளது. தவெகவை யாருமே கண்டு கொள்வது கிடையாது. அதிமுக, திமுக கூட்டணி மட்டுமே களத்தில் நிற்கும். ஒரு நாள் கூத்துக்கு தவெக தாங்காது. தவெக இந்த தேர்தலோடு முடிந்து விடும்” என்றார்.

அதிமுக 3ஆவது இடத்திற்கு தள்ளப்படும் என்ற மாணிக்கம் தாகூர் கருத்து குறித்த கேள்விக்கு, “தனித்து நின்று 27 ஆயிரம் ஓட்டு வாங்கியவர்களுக்கெல்லாம் (மாணிக்கம் தாகூர்) அதிமுக பதில் கூற முடியாது. காங்கிரஸ் கட்சி எதுவும் இல்லாமல் வேடிக்கை காட்டுகிறது. அவர்கள் பேச்சை வேடிக்கையாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share