மார்ட்டின் மனைவி லீமாரோஸ் என்கிற விஷ விதையை எடப்பாடி பழனிசாமி அதிமுகவுக்குள் விதைத்திருக்கிறார் என முன்னாள் எம்பி கே.சி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
அதிமுக முன்னாள் எம்.பி. கே. சி.பழனிசாமி தனது சமூக வலைதளப்பதிவில், “அம்மா முதலமைச்சராக இருந்த பொழுது மார்டினை வருடக்கணக்கில் சிறையில் வைத்து கள்ள லாட்டரியை தமிழகத்தில் இருந்து தடுத்தார். திமுக குடும்பத்திற்கு மார்ட்டின் நெருக்கமாக உருவெடுத்த போதும் அவரை பணத்தேவைக்காக பயன்படுத்திக்கொண்டாலும் மார்டினின் மருமகன் அரசியல் வாய்ப்பு பெற முயன்ற போது திமுக அதை மறுத்து வெளியே அனுப்பினார்கள்.
ஆனால் தற்போது எதிர்கால விளைவுகளை உணராமல் மாபெரும் வரலாற்று பிழையையும், மன்னிக்க முடியாத குற்றத்தையும் எடப்பாடி பழனிசாமி செய்திருக்கிறார்.
மார்டினின் மனைவி 2 மாதங்களுக்கு முன் அதிமுகவில் தன்னை உறுப்பினராக இணைத்துக்கொண்டிருக்கிறார். இன்றைக்கு புரட்சித்தலைவரோடு பயணித்தவர்கள் பலர் புறக்கணிக்கப்பட்டிருக்கிற நிலையில் அந்த மார்ட்டின் மனைவி லால்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக்கப்பட்டிருக்கிறார். இது அம்மாவுக்கும், புரட்சித்தலைவருக்கும், அதிமுக தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் எடப்பாடி செய்திருக்கிற மாபெரும் துரோகம்.
தமிழகத்தில் மீண்டும் கள்ள லாட்டரியை புழக்கத்தில் கொண்டுவந்து கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கவேண்டும் என்கிற நோக்கத்தில் அரசியல் அதிகாரத்தை பெறுவதற்கு அவர்களது குடும்பம் திமுக, அதிமுக, பாஜக, தவெக என்று பல முனைகளிலும் பயணிக்கிறார்கள். மார்ட்டின் திமுகவின் கஜானா, மார்ட்டின் மனைவி அதிமுக வேட்பாளர், மார்ட்டின் மருமகன் தவெகவில் இரண்டாம் நிலை பொறுப்பாளர், மார்டினின் மகன் பாண்டிச்சேரியில் பாஜக கூட்டணியின் முக்கிய அங்கம்.
1972ல் கட்சி துவக்கிய போது முதல்முதலில் ஆட்சி அமைத்த பாண்டிச்சேரியில் குறைந்தபட்சம் 4-5 தொகுதிகளிலாவது போட்டியிட்டிருக்க வேண்டிய அதிமுக நேற்று கட்சி துவக்கிய மார்டினின் மகனுக்கு 2 தொகுதிகளை விட்டுக்கொடுத்துவிட்டது. அதிமுக பெற்றிருப்பதும் வெறும் 2 இடங்கள். மார்ட்டின் குடும்பத்துக்கு அமித்ஷாவுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி மார்டினின் மகனுக்கு கட்சி துவக்கி பாஜகவுடன் இணைத்து கொடுத்ததில் ஒருவேளை எடப்பாடி பழனிசாமியின் பங்கும் பெருமளவில் இருந்துருக்குமோ?
மார்ட்டின் மனைவி ஒருவேளை சட்டமன்ற தேர்தலில் வென்றால் தேர்வாகிற ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் 100 கோடி கொடுக்கக்கூடிய வல்லமை பெற்றவர், ஒவ்வொரு பொதுக்குழு உறுப்பினருக்கும் 5-10 கோடிக்கு மேல் கொடுத்து ஒட்டுமொத்த பொதுக்குழு உறுப்பினர்களையும் தன் பணபலத்தால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து கட்சித்தலைமையை கைப்பற்றக்கூடிய பொருளாதார வலிமை பெற்றவர்கள். பாஜக கண் அசைக்கிற நேரத்தில் இந்த அவலம் எதிர்காலத்தில் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், தொண்டர்களால் தலைமை என்று பாதுகாப்பு கவசமாக உருவாகியிருந்த அதிமுக சட்ட விதிகளை உடைத்து எரிந்து தன் பணபலத்தால் தலைமையை கைபற்ற முடியும் என்று எடப்பாடிக்கு தெரிந்தும் தெரியாமலே மார்ட்டின் மனைவி லீமாரோஸ் என்கிற விஷ விதையை அதிமுகவுக்குள் விதைத்திருக்கிறார்.
எப்படி இருந்தாலும் புரட்சித்தலைவரின் விசுவாசிகளும், அம்மாவின் தொண்டர்களும் இந்த இயக்கத்திற்கு அரணாக நின்று பாதுகாக்க வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை.” என தெரிவித்துள்ளார்.
