தமிழக மீனவர்கள் கைது : மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

Published On:

| By Pandeeswari Gurusamy

MK Stalin DMK Mupperum Vizha

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களின் மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதி உள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 31 மீனவர்களும், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்களும், இன்று (03.11.2025) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கைக் காவலில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும். அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிப்பதற்கு உடனடியாக தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு இன்று (03.11.2025) கடிதம் எழுதியுள்ளார்.

ADVERTISEMENT

அக்கடிதத்தில், 03.11.2025 அன்று நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 31 மீனவர்களையும், அவர்களது மூன்று இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகளையும் சிறைபிடித்துள்ள இலங்கைக் கடற்படையினர், அதே நாளில், மற்றொரு சம்பவத்தில், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்களையும், அவர்களது நாட்டுப் படகினையும் சிறைபிடித்துள்ளதாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மீனவர்களின் வாழ்க்கையும். அவர்களது வாழ்வாதாரமும் கடலுடன் பிரிக்கமுடியாத வகையில் பின்னிப் பிணைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இதுபோன்று தொடர்ச்சியாக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தமிழ்நாட்டின் மீனவ சமூகத்தினரிடையே ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக கவலையோடு தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், ஒவ்வொரு கைது நடவடிக்கையின்போதும், மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களது குடும்பத்தினரிடையே ஆழ்ந்த அச்ச உணர்வையும், பாதுகாப்பற்ற நிலையையும் ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய நிலவரப்படி, 114 மீனவர்களும், 247 படகுகளும் இலங்கை வசம் காவலில் உள்ளதாக தனது கடிதத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

ADVERTISEMENT

எனவே, இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிப்பதற்கு உடனடியாக உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.”என கூறப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share