சிறுபான்மையின மாணவ, மாணவிகள் பட்ட மேற்படிப்பு பயில உதவும் வகையில், தமிழ்நாடு அரசு புதிய உதவித்தொகை திட்டத்தை உருவாக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஆண்டு தோறும் 10 மாணவர்களுக்கு தலா ரூ.36 லட்சம் வீதம் மொத்தம் ரூ.3.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், மத்திய அரசின் ‘பதோ பர்தேஷ்’ திட்டம் 2022 டிசம்பரில் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சிறுபான்மையின மாணவர்களின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்யும் நோக்கத்தில் இந்த புதிய திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக, சிறுபான்மையினர் நல ஆணையர் ரூ.3.60 கோடி நிதி ஒதுக்கீடு கோரி முன்மொழிவு சமர்ப்பித்திருந்தார். அரசு இதை ஆய்வு செய்து, மாணவர்களுக்கு உயர்தர சர்வதேச கல்வி வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்தில் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த திட்டம் வக்ஃப் வாரியத்தின் மூலம் பைலட் அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள சிறுபான்மையின மாணவ, மாணவிகள் உலகத் தரம் வாய்ந்த கல்வியைப் பெற வழிவகை செய்யும் இந்த திட்டம், அவர்களின் சமூக மற்றும் பொருளாதார உயர்வுக்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.