இரவில் சீக்கிரம் தூங்குவதற்கான (Falling asleep) 3 முக்கிய வழிமுறைகளைப் பற்றி பார்க்கலாம்.
தற்போதைய காலகட்டத்தில் பலருக்கும் தூக்கம்தான் பெரும் பிரச்சனையாக இருக்கிறது. பலரும் இரவு நேரங்களில் தூக்கம் வரவில்லை என்று அவதிப்படுவதையும் காண முடிகிறது. தூக்கமின்மை காரணமாக சோர்வு, மன அழுத்தம், பணிகளில் கவனம் செலுத்த முடியாத சூழல்கள் உண்டாகின்றன. தினமும் 8 மணி நேரம் நிம்மதியான ஆழ்ந்த உறக்கம் அவசியம். ஆனால், சில பழக்கங்கள் காரணமாக இரவு நேரத்தில் தாமதமாக தூங்குவதும், காலையில் சீக்கிரம் எழுந்துவிடுவது நடக்கிறது.
இரவில் சீக்கிரம் எப்படி தூங்குவது? (How to Sleep Fast):
காலை முதல் மாலை வரை உடல் சோர்வு, மனச் சோர்வு இருந்தாலும் கூட இரவில் படுத்தால் தூக்கம் வருவதில்லை. குறிப்பாக இரவில் நீண்ட நேரம் செல்போன் பார்ப்பது தூக்கமின்மையை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் இரவு நேரத்தில் விரைவாக தூங்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என சில டிப்ஸ்களை மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
செல்போன், டிவி பார்ப்பதை தவிர்க்க வேண்டும் (Avoid Mobile and TV before sleep):
படுக்கைக்கு செல்வதற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்பே செல்போன்கள், டிவிகள், மடிக்கணினிகள் அல்லது வேறு எந்த திரையையும் பயன்படுத்துவதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும். திரைகளில் இருந்து வெளிப்படும் நீல ஒளி மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது, தூக்கத்தை ஏற்படுத்த உதவும் மெலடோனின் ஹார்மோனை அடக்குகிறது. இதனால் தூக்கம் தாமதப்படுகிறது. அத்துடன், தூக்கத்தில் இருந்து பாதியில் எழுந்துவிடவும் வைக்கிறது. இதன் விளைவாக, காலையில் எழுந்தவுடன் சோர்வு, எரிச்சல் மற்றும் மன அழுத்தம் ஏற்படுகிறது. படுக்கைக்குச் செல்வதற்கு முன் திரைகளை பார்ப்பதை தவிர்ப்பது ஆழ்ந்த மற்றும் நிம்மதியான தூக்கத்தை அடைய எளிதான வழியாகும்.
புத்தகம் படிக்கலாம், இசை கேட்கலாம் (Read Book, Listen Music):
மாலை நேரங்களில் ஒரு நல்ல புத்தகத்தைப் படிப்பது, லேசான இசையைக் கேட்பது, ஆழ்ந்த சுவாசம், லேசான குடும்ப உரையாடல்கள் அல்லது தியானம் போன்ற அமைதியான செயல்களில் ஈடுபடலாம். புத்தகம் படிப்பதன் மூலம் நமது மனது ஒருநிலைபடுத்தப்படுவதால் தூக்கம் எளிதாக வருகிறது. இசை கேட்பது நமது மனதை இலகுவாக்குவதால் நமக்கு நிம்மதியான உறக்கம் கிடைக்கும். இந்த செயல்கள் நம் மன அழுத்தத்தை குறைத்து நம்மை தூக்கத்திற்கு தயார்படுத்துகின்றன.
காபி உள்ளிட்ட பானங்களை இரவில் குடிக்க வேண்டாம் (Avoid Tea, Coffee):
ஒவ்வொரு நாளும் உங்கள் படுக்கை நேரத்தை சீராக வைத்திருக்க வேண்டும். அப்படி செய்யும்போது அது உங்களுடைய தினசரி வழக்கமாகிவிடுகிறது. உங்களது படுக்கை அறை இருட்டாகவும் காற்றோட்டம் நிறைந்ததாகவும், மிதமான குளிராகவும் வைத்திருக்க வேண்டும். இரவில் காஃபின் அல்லது கனமான உணவைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை செரிமானத்தில் பிரச்சனையை ஏற்படுத்தி அசவுகரியமாக உணர வைப்பதால் தூக்கம் தாமதப்படும். தூங்குவதற்கு 3 மணி நேரம் முன்பே சாப்பிட்டுவிட வேண்டும். இவற்றை செய்தால் படுத்த 1 மணி நேரத்திற்குள்ளாக தூக்கம் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. நன்றாக தூங்கினாலே பெரிய உடல்நலப் பிரச்சனைகளில் இருந்து தப்பித்துவிடலாம்.
