கோவை மேட்டுப்பாளையத்தில் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடம் பிக்பாக்கெட் அடிப்பதற்காகவே 7 பேர் கொண்ட குழு வந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. AIADMK EPS Event
2026 சட்டமன்ற தேர்தல் பரப்புரையின் முதற்கட்டமாக அதிமுக “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சுற்றுப்பயணத்தை நேற்று தொடங்கியது. இந்த நிகழ்வில் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளும், கூட்டணி கட்சியான பாஜகவை சேர்ந்த முக்கிய தலைவர்களும் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் பங்கேற்ற தேக்கம்பட்டி ஊராட்சி முன்னாள் துணை தலைவர் தங்கராஜ் என்பவரின் பேண்ட் பாக்கெட்டை பிளேடால் கட் செய்த அடையாளம் தெரியாத நபர்கள் ரூ.1 லட்சத்தை திருடினர். இதே போல் நெல்லித்துறையை சேர்ந்த ஆனந்த் என்பவரிடம் ரூ.1 லட்சமும், அபு என்பவரிடம் ரூ.2500 ம் பிக் பாக்கெட் அடிக்கப்பட்டது.
இது குறித்த புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் எடப்பாடி பழனிசாமியின் கூட்டத்தில் பிக்பாக்கெட் அடிப்பதற்காகவே 7 பேர் கொண்ட கும்பல் வந்தது தெரியவந்துள்ளது. பிக்பாக்கெட் அடிக்கப்பட்ட பணத்தை மீட்கும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக உள்ளனர்.
