அமெரிக்க தேர்தலில் இவிஎம் இயந்திரங்களை ஹேக் செய்யப்படும் ஆபத்து மிக அதிகமாக இருப்பதால் அவற்றை அகற்ற வேண்டும் என எக்ஸ் தள உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது பல்வேறு புகார்கள் முன்வைக்கப்பட்ட போதிலும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான நம் நாட்டில் சமீபத்தில் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடந்து முடிந்தது.
இதனையடுத்து உலகின் 2வது மிகப்பெரிய ஜனநாயக நாடான அமெரிக்காவில் இந்தாண்டு நவம்பர் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதியுமான டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர்.
இதற்கிடையே கடந்த ஜூன் 2ஆம் தேதி போர்ட்டோ ரிக்கோவில் புதிய முற்போக்கு கட்சி மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றின் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான முதன்மைத் தேர்தல் நடந்தது.
இதில் நூற்றுக்கணக்கான வாக்குச் சீட்டுகள் தவறான முடிவுகளைக் காட்டுவதாக இரு கட்சிகளும் குற்றம்சாட்டின. அதனை ஏற்று மின்னணு வாக்குப்பதிவு நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்து வருவதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

சுயேச்சை வேட்பாளர் குற்றச்சாட்டு!
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளரான ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர் அதிரடியான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “போர்ட்டோ ரிக்கோவில் நடைபெற்ற முதன்மைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான நூற்றுக்கணக்கான முறைகேடுகள் கண்டறியப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதிர்ஷ்டவசமாக, காகித வாக்குச்சீட்டுகள் இருந்ததால், சிக்கல் கண்டறியப்பட்டு வாக்குப் எண்ணிக்கை சரி செய்யப்பட்டது. ஒருவேளை காகித வாக்குச்சீட்டுகள் இல்லையென்றால் என்ன நடக்கும்?

AI மூலம் ஹேக் செய்ய வாய்ப்பு!
அவரது இந்த பதிவை ரீட்வீட் செய்துள்ள எலான் மஸ்க், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும். மனிதர்கள் அல்லது AI மூலம் அவை ஹேக் செய்யப்படுவதற்கான ஆபத்து மிக அதிகமாகவே உள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
தடைக்காலம் முடிந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் பலி!
பியூட்டி டிப்ஸ்: பொலிவற்ற கூந்தல், சருமம்: உண்ணும் உணவுகளின் மூலம் விரட்டலாம்!
