தஞ்சாவூர் அருகே திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் சென்ற வானகத்தை மறித்து (இன்று மார்ச் 31) தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. மே 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் நிலையில், அன்றைய தினமே முடிவுகள் வெளியாகும்.
இந்நிலையில், வேட்புமனு தாக்கல் நேற்று (மார்ச் 30) தொடங்கியது. தமிழக முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் நேற்று தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று வேட்புமனுவைத் தாக்கல் செய்த பின்னர், கொளத்தூரில் ரோடு ஷோ மூலம் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் முதல் கட்டமாக தனது சொந்த ஊரான திருவாரூரில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். திருவாரூர் தெற்கு ரத வீதியில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ளார்.
திருவாரூர் தொகுதி திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன், திருத்துறைப்பூண்டி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மாரிமுத்து, நன்னிலம் தொகுதி எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகமது முபாரக், மன்னார்குடி தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோரை ஆதரித்து முதல்வர் இன்று வாக்கு சேகரித்துப் பேச உள்ளார்.
முதலமைச்சர் திருவாரூரில் நடைபெறும் பிரச்சாரத்தில் பங்கேற்பதற்காக இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி சென்றார். அங்கிருந்து சாலை மார்க்கமாக திருவாரூர் நோக்கி புறப்பட்டார்.அப்போது, தஞ்சாவூர் அருகே சாலிய மங்கலத்தில் அவர் சென்ற பிரச்சார வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது. தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
முதல்வர் அமர்ந்திருந்த வேனின் முன்பகுதியில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின்பகுதி கதவையும் திறந்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் பெண் போலீசாரும் ஈடுபட்டனர். முதல்வரின் வாகனத்தில் எதுவும் இல்லாததால், சோதனைக்குப் பின்னர் அவரது வாகனத்தை செல்ல அனுமதித்தனர்.
