தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டிலும் நடத்தும் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தின் போது திமுகவினர் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான, “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
வாக்காளர் பட்டியல் திருத்தங்களுக்குப் பதில் குடியுரிமை அடிப்படையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களிலும் SIR எனப்படும் இந்த சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. இதனையடுத்து திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், ” S.I.R. எனும் அநீதியிலிருந்து தமிழ்நாட்டைக் காத்திட – ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கழகத்தின் வெற்றியை உறுதி செய்திட – என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும், அவற்றை எப்படி மேற்கொள்ள வேண்டும், கழகத் தலைமை முதல் கடைக்கோடியில் உள்ள தொண்டர் வரை அனைவரையும் ஒருங்கிணைத்துச் செயல்படுவது எப்படி என்பது உள்ளிட்ட அனைத்தையும் விவாதித்து, அவற்றைக் களத்தில் செயல்படுத்துவதற்காக “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” என்ற பயிற்சிக் கூட்டம் நடைபெறும் என அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, சென்னையை அடுத்த மாமல்லபுரம், ஈ.சி.ஆர்.சாலையில் உள்ள கான்ஃப்ளூயன்ஸ் அரங்கில் (Confluence Hall)ல் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தற்போது இந்த வாக்கு சாவடி பயிற்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தப் பயிற்சிக் கூட்டத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதிப் பார்வையாளர்கள், மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், மாநகர – ஒன்றிய – நகர – பகுதி -பேரூர்க் கழகச் செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்தப் பயிற்சிக்கூட்டத்திற்குப் பிறகு ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள பாக முகவர்கள், பாக உறுப்பினர்கள் குழு, பாக டிஜிட்டல் ஏஜென்ட், பாக இளைஞரணி, பாக மகளிரணி, பாகத்திற்குட்பட்ட கிளை, வார்டு செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒருங்கிணைந்து ‘என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி’ என்பதை முன்னெடுக்க வேண்டும்; மாநில நிர்வாகியாக இருந்தாலும் கூட அவரவர் வாக்குச்சாவடியில் வெற்றி பெற வேண்டும் என்பதே இலக்காக இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின், ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
