தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்று அமமுக தலைமை விளக்கமளித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றன.
இந்தநிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக ஏற்கும் கூட்டணியில் இடம் பெறமாட்டேன் என்று அமமுக பொதுச்செயலாளர் கூறி வந்தார்.
ஆனால் என்.டி.ஏ கூட்டணியில் மீண்டும் அமமுக இணையலாம் என்று தகவல்கள் வருகின்றன.
இந்நிலையில் இன்று (ஜனவரி 13) கூட்டணி விவகாரம் தொடர்பாக அமமுக தலைமை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், “கடந்த 5ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெற்ற கழக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில், கூட்டணி விவகாரத்தில் தமிழகத்தின் நலன் மற்றும் கழகத்தின் நலனை மையமாகக் கொண்டே கூட்டணி அறிவிக்கப்படும் என்பதை பொதுச்செயலாளர் அவர்கள் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அந்தச் செய்தி அனைத்து ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் ஒளிபரப்பப்பட்டது.
இந்தச் சூழலில் சில ஊடகங்கள், கூட்டணி விவகாரத்தில் தயக்கம், குழப்பம், அழுத்தம் என பொய்ப் பிரச்சாரம் செய்து வருவதோடு, கடந்த சில தினங்களாக கழக நிகழ்ச்சிகளில் பொதுச்செயலாளர் கலந்துகொள்ளவில்லை எனவும் தவறான தகவலைப் பரப்பி வருகின்றனர்.
பொதுக்குழு நிகழ்ச்சிக்குப் பின்பாக, சொந்த வேலைகள் காரணமாகவும், பொங்கல் பண்டிகை நாட்கள் வருவதாலும் எந்த நிகழ்ச்சிகளுக்கும் திட்டமிடப்படவில்லை. அதே நேரத்தில், கூட்டணி தொடர்பாக பொதுச்செயலாளருக்கு எந்தவொரு தயக்கமும், குழப்பமும், அழுத்தமும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு, உரிய நேரத்தில் கூட்டணி தொடர்பான நிலைப்பாட்டினை அறிவிப்பார் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
வருகின்ற 17ஆம் தேதி எம்.ஜி.ஆரின் 109வது பிறந்தநாள் விழா அன்று சென்னை, அண்ணாசாலையில் அமைந்துள்ள புரட்சித்தலைவரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்ற நிகழ்ச்சியில் பங்கேற்று நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்திக்கவுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
