எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து என்.டி.ஏ கூட்டணி கட்சித் தலைவர்களும் டெல்லி செல்லவுள்ளனர்.
என்.டி.ஏ கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசுவதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 19) டெல்லி சென்றார்.
என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள அமமுக குக்கர் சின்னத்துக்கு பதிலாக இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட வேண்டும். 180 முதல் 185 தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் தான் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயலிடம் கூறியிருக்கிறார்.
ஆனால் இரட்டை இலை சின்னத்தில் நிற்க அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சம்மதிக்கவில்லை. இதுதொடர்பாக தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயல் அமித்ஷாவிடம் தகவல் தெரிவிக்க, அவரது அழைப்பின் பேரில் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளார். இதுகுறித்து மின்னம்பலத்தில் தினகரனுக்கு இரட்டை இலை தான் – எடப்பாடி உறுதி : அமித்ஷா டெல்லி அழைத்த பின்னணி! என்ற தலைப்பில் வெளியான செய்தியில் கூறியிருந்தோம்.
இந்தசூழலில் அமித்ஷா அழைப்பின் பேரில் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்ந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் டெல்லி செல்கிறார்கள். அங்கேயே தொகுதி பங்கீட்டை பேசி முடிக்க அமித்ஷா திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் வருகின்றன.
