தினகரனுக்கு இரட்டை இல்லை தான் – எடப்பாடி உறுதி : அமித்ஷா டெல்லி அழைத்த பின்னணி!

Published On:

| By Kavi

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளார்.

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி திமுக, அதிமுக சார்பில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

ADVERTISEMENT

அதிமுகவை பொறுத்தவரை இன்னும் எந்த கூட்டணி கட்சிக்கும் தொகுதிகளை பிரித்து கொடுக்கவில்லை. விரைவில் தொகுதி பங்கீடு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாலும், கூட்டணிக்குள் தொகுதிகளை ஒதுக்குவதில் இழுபறி நீடித்து வருகிறது.

இந்தசூழலில் இன்று (மார்ச் 19) சென்னை வந்து எடப்பாடியை சந்தித்து பேச இருந்தார் பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயல். ஆனால், மாறாக டெல்லி சென்றுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

ADVERTISEMENT

அவர் டெல்லி செல்வது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் பியூஸ் கோயல் தரப்பில் விசாரித்தபோது,

“தமிழகத்தில் கூட்டணி தொடர்பாக ஈபிஎஸிடம் பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயல் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். ஆனால் பியூஸ் கோயல் திடீரென அமித்ஷாவிடம், எடப்பாடியுடன் என்னால் பேசமுடியவில்லை. நீங்கள் அழைத்து அவரிடம் பேசுங்கள் என்று கூறியிருக்கிறார்.

ADVERTISEMENT

அதாவது, பாஜக -பாமகவை தவிர கூட்டணியில் உள்ள டிடிவி தினகரனின் அமமுக, ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக் கட்சி, பச்சமுத்துவின் ஐஜேகே, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் என பிற கட்சிகள் எல்லாம் இரட்டை இலையில் தான் நிற்க வேண்டும் என்று கறாராக இருக்கிறார் எடப்பாடி.

இதற்கிடையே அமமுக சார்பில் கூட்டணியில் 10 தொகுதிகள் கேட்கப்பட்டது. ஆனால் தேமுதிமுகவும் நமது கூட்டணிக்கு வருவதால், 10 சீட் எல்லாம் கொடுக்க முடியாது, எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி சொல்ல, டிடிவி தினகரனுக்கு 8 சீட் என முடிவானது. இப்போது தேமுதிக, என்.டி.ஏ கூட்டணிக்கு வராமல், திமுகவுடன் கூட்டணி அமைத்துவிட்ட நிலையில், டிடிவி தினகரன் தேமுதிகதான் வரவில்லையே… எங்களுக்கு 10 சீட் கொடுங்கள் என கேட்டார்.

ஆனால் எடப்பாடி பழனிசாமி, 10 சீட் இல்லை, 9 சீட் அமமுகவுக்கு தருகிறேன் . ஆனால் அக்கட்சி குக்கர் சின்னத்தில் இல்லாமல் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.

இந்த தகவலை பியூஸ் கோயல் டிடிவி தினகரனிடம் சொல்ல, அது எப்படி முடியும்?. கூட்டணிக்கு கூப்பிடும் போது இதையெல்லாம் சொல்லவில்லையே. எங்களால் இரட்டை இலையில் போட்டியிட முடியாது. குக்கர் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று தெரிவித்துவிட்டார்.

ஆனால் ஈபிஎஸ், அதிமுக மட்டுமின்றி பிற கூட்டணி கட்சிகளும் சேர்ந்து 180 -185 தொகுதிகளிலாவது இரட்டை இலை சின்னத்தில்தான் நிற்க வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறார்.

இந்த பின்னணியில் தான் அமித்ஷாவின் அழைப்பை ஏற்று எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி செல்கிறார். இந்த பேச்சுவார்த்தை முடிவில் தான் எடப்பாடி பழனிசாமி சமாதானமாவாரா என்பது தெரியவரும்” என்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share