”ஜெய்பீம் விமர்சனம் எழுதிய முதல்வர் எங்கே இருக்கிறார்?” – திருபுவனம் லாக்கப் மரணம்… எடப்பாடி கண்டனம்!

Published On:

| By christopher

edappadi condemned for thirupuvanam lockup death

நகை திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் காவல் நிலையத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் முழு உண்மையை வெளி கொண்டுவர உடனடியாக மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைத்து, முழு விசாரணை நடத்த வேண்டுமென அதிமுக பொதுச்செயாலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். edappadi condemned for thirupuvanam lockup death

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் பாதுகாவலராக அஜித்குமார் என்பவர் பணிபுரிந்து வந்தார். இதற்கிடையே அந்த கோவிலுக்குச் சென்ற மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா என்பவர் தன்னுடைய நகைகளை காணவில்லை என போலீசில் புகார் அளித்தார்.

புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த பெண்ணுக்கு உதவிய அஜித்குமார் மற்றும் அவரது 5 சகோதர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். போலீசாரின் விசாரணையின் போது அஜித்குமார் திடீரென உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அஜித் குமாரை கொடூரமாக தாக்கி போலீசார் தான் கொலை செய்ததாக குற்றம் சாட்டி அவரது உறவினர்கள் மற்றும் திருபுவனத்தைச் சேர்ந்த வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த மரணம் குறித்து எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் என்பவர் பெண் பக்தரின் காரில் இருந்த ஒன்பதரை பவுன் நகையை திருடி விட்டதாக வந்த புகாரை அடுத்து, திருபுவனம் காவல்துறை அஜித் குமாரை கைது செய்து விசாரணை செய்ததாகவும், அச்சமயத்தில் காவலரின் தாக்குதலால் அஜித் குமார் மரணம் அடைந்து விட்டதாகவும் அவரின் உறவினர்கள் இறந்த அஜித் குமாரின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

“ஜெய்பீம் படம் பார்த்தேன். உள்ளம் உலுக்கியது” என சினிமா விமர்சனம் எழுதிய விடியா அரசின் முதலமைச்சர் எங்கே இருக்கிறார்? விக்னேஷ் லாக்கப் மரணத்தின் போது, சட்டப்பேரவையிலேயே பச்சைப்பொய் பேசியவர் தானே நீங்கள்? இதற்கும் அதே போல் பொய் தான் பதிலாக வருமா? தவறு செய்ததாக காவல்துறை கருதினால், கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து, உரிய சட்ட நெறிமுறையை பின்பற்ற வேண்டுமே தவிர, சட்டத்தை தங்கள் கைகளில் முழுமையாக காவல்துறை எடுத்துக்கொள்ள கூடாது.

தன்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையைக் கூட நிர்வகிக்கத் தெரியாத பொம்மை முதல்வருக்கு எனது கடும் கண்டனம்.

திருபுவனம் காவல் நிலையத்தில் திருக்கோவில் காவலாளி அஜித் குமார் மரணம் அடைந்த நிகழ்வு குறித்து முழு உண்மையை வெளி கொண்டுவர உடனடியாக மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைத்து, முழு விசாரணை நடத்தி, இந்த மரணத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், மேலும் இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க இந்த விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன்” என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share