‘பேதமற்ற இடமே மேலான திருப்தியான இடம்’ என்று தன் வாழ்வில் சமத்துவத்துக்காகப் போராடியவர் தந்தை பெரியார். “தோழமைதான் சமத்துவத்தின் கனி; சமதர்ம மணம்; அதைக் காண வேண்டுமானால் சாதி தொலைய வேண்டும்” என்றார் அறிஞர் அண்ணா. முன்னவர்கள் காட்டிய வழியில், சமூக மாற்றத்திற்கான திட்டங்களை முன்னெடுத்தது கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு. 1996ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் அமர்ந்தபோது விவசாயிகளே விற்பனையாளர்களாகத் திகழ வழி செய்யும் உழவர் சந்தை திட்டத்தைக் கொண்டுவந்தார் கலைஞர். இது கிராமப்புற பொருளாதாரம் வளர வழி வகுத்தது. அதேநேரத்தில், சமூக அமைப்பில் சமத்துவம் நிலவும் வகையில் சமத்துவபுரம் திட்டத்தைத் தமிழகத்துக்குப் பரிசளித்தார்.
1997ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதியன்று தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் மூலமாக, ஒரு மாவட்டத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைக்கப்பட்டது. ஐந்து செண்ட் அளவில் உருவாக்கப்பட்ட 100 வீடுகள் இந்தக் குடியிருப்பில் இருக்கும். குடிநீர், சாலை, கல்விக்கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கொண்டதாக, இவை உருவாக்கப்பட்டன. சமத்துவபுரம் அமைக்கும் இடத்திலெல்லாம் தந்தை பெரியார் சிலை நிறுவ முடிவானது. ஆனால், எந்த மதத்தைச் சேர்ந்த வழிபாட்டுத் தலங்களுக்கும் சமத்துவபுரம் வளாகத்தில் இடமில்லை என்று முடிவு செய்யப்பட்டது.
வீடுகளை ஒதுக்குவதிலும் சமூகநீதி பின்பற்றப்பட்டது. ஆதிதிராவிடர்களுக்கு 40, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 25, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 25, இதர சமூகத்தினருக்கு 10 என்று சமத்துவபுரத்தில் வீடுகள் ஒதுக்கப்பட்டன.
தீண்டாமையை ஒழிக்கும் நோக்கில், சாதிகள் ஒழித்து சமத்துவம் நிலவும் எண்ணத்தில், தமிழகத்தில் அமைக்கப்பட்ட முதல் சமத்துவபுரமானது மதுரை மாவட்டம் மேலக்கோட்டையில் உருவானது. 1998ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதியன்று இதனைத் திறந்து வைத்து உரையாற்றினார் அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர். இதனைப் பயன்படுத்துபவர்கள் இங்கே அறிவினை வளர்க்கவும், நல்ல பிள்ளைகளை உருவாக்கவும் ஒத்துழைக்க வேண்டுமென்று அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். “சமத்துவபுரத்திலே குடியேறுகின்ற நீங்கள் காட்டுகின்ற ஒற்றுமை இந்த மாநிலத்திற்கும், நாட்டிற்கும் வழிகாட்டியாக அமைய வேண்டும். சமத்துவபுரங்கள் வளரட்டும். தமிழ்நாடே சமத்துவபுரமாக ஆகட்டும்! இந்தியத் திருநாடே சமத்துவபுரமாக ஆகட்டும்!” என்று அங்கு குடியிருந்த மக்களிடையே பேசினார். கலைஞர் கூறியது போலவே, திமுக ஆட்சியிலிருந்த 5 ஆண்டுகளில் 145 சமத்துவபுரங்கள் தமிழகமெங்கும் அமைக்கப்பட்டன.
ஐந்தாண்டு இடைவெளிக்குப் பிறகு, 2006ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சியைப் பிடித்தது திமுக. அப்போது, புதியபொலிவுடன் மாநிலத்தில் பல பகுதிகளில் சமத்துவபுரம் திட்டம் செயல்படுத்தப்பட்டது. சில இடங்களில் குடியிருப்பு வளாகத்திலேயே நியாயவிலைக்கடை, விளையாட்டு மைதானங்கள், குடிநீர் தேக்கத் தொட்டிகளும் அமைக்கப்பட்டன. இதன் மூலமாக, தமிழகமெங்கும் அமைக்கப்பட்ட சமத்துவபுரங்களின் எண்ணிக்கை 240ஆக உயர்ந்தது.
ஆட்சி மாற்றத்துக்குப் பின் சமத்துவபுரம் திட்டம் முழுவீச்சில் செயல்படுத்தப்படவில்லை. ஆனாலும், சமத்துவத்தை ஏற்படுத்தும் அதன் அடிப்படை நோக்கம் உயிர்ப்போடு இருப்பது, அங்கு வாழும் மக்களின் வாழ்வில் பிரதிபலிக்கிறது. சமத்துவம் என்பது கனவல்ல, நனவு; சமத்துவபுரம் என்று பெயர் சூட்டி, அதனை நிகழ்த்திக் காட்டியவர் கலைஞர்.