நமது திராவிட மாடல் அரசு அறிவித்த இந்தியாவின் முதல் கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய தாவரவகை கடல் பாலூட்டிகளான, கடற்பசுக்கள் முதன்மையாக கடற்புற்களை உணவாக கொண்டு வளரும். கடற்பசு இனங்களை பாதுகாப்பதனால், கடல் பகுதிகளுக்கு அடியில் உள்ள கடற்புற்களை பாதுகாக்கவும், மேம்படுத்தவும், வளிமண்டல கார்பனை அதிக அளவில் நிலைப்படுத்தவும் உதவும்.
இந்த நோக்கில் தமிழகத்தில் அழிந்துவரும் நிலையில் உள்ள மிக அரிதான கடற்பசு (Dugong) இனத்தையும் அதன் கடல் வாழ்விடங்களையும் பாதுகாக்கும் பொருட்டு மன்னார்வளைகுடா, பாக்.விரிகுடா பகுதியில் கடற்பசு பாதுகாப்பகம் அமைக்கப்படும் என்று தமிழக அரசால் 2021 செப்டம்பர் 3ஆம் தேதி சட்டமன்றத்தில் அறிவித்தது.
அதை செயல்படுத்தும் வகையில் 448 சதுர கி.மீட்டர் பரப்பளவில், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளை உள்ளடக்கிய பாக்.விரிகுடாவில் கடற்பசு பாதுகாப்பகமாக அறிவித்து அரசாணை வெளியானது.
இது தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளின் ஒரு முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தஞ்சை – புதுக்கோட்டை மாவட்டங்களில் அமைந்த பாக் வளைகுடாவில், நமது திராவிட மாடல் அரசு அறிவித்த இந்தியாவின் முதல் கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம்!
இந்த முன்னோடி முயற்சியைப் பாராட்டும் தீர்மானம், அபு தாபி IUCN World Conservation Congress2025-க்கு முன் ஆன்லைன் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டது.
இந்த முயற்சியில் பங்கேற்ற tnforestdept , Omcar Foundation உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுகள்!” எனத் தெரிவித்துள்ளார்.