சக்தி புயல் எதிரொலியாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 4) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடகிழக்கு அரபி கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுவடைந்து, நேற்று காலை நிலவரப்படி, குஜராத் அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டு இருந்தது. இது புயலாக மாறிய நிலையில், ‘சக்தி’ என பெயரிடப்பட்டுள்ளது. அடுத்த, 24 மணி நேரத்தில், இது தீவிர புயலாக மாறக்கூடும்.
இதன் காரணமாக, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, ராமநாதபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழகத்தில், அக்டோபர் 9 வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது. மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொருத்தவரை வானம் இன்று பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், அவ்வப்போவது கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சென்னையில் இன்று அதிகாலை 5 மணி முதலே பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது. சென்னை வடபழனி, தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகாலை முதலே காற்றுடன் பரவலாக மழை பெய்தது.