“கடத்தல் வழக்கில் என்ன தொடர்பு?” : ஏடிஜிபியிடம் துருவி துருவி கேள்வி கேட்ட பெண் டிஎஸ்பி!

Published On:

| By vanangamudi

dsp tamilarasi investigate adgp jayaram

கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராமிடம் நேற்றிரவு முதல் இன்று (ஜூன் 17) அதிகாலை வரை விசாரணை நடத்தப்பட்டது. dsp tamilarasi investigate adgp jayaram

திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கத்தில் காதல் திருமணம் செய்த இளைஞர் தனுஷின் சகோதரன் கடத்தப்பட்ட விவகாரத்தில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தகவல் வெளியானது.

புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராம் உள்ளிட்டோர் இந்த கடத்தல் சம்பவத்துக்கு உதவியது தெரியவந்தது.

இந்தநிலையில் நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜரான பூவை ஜெகன்மூர்த்தியை பார்த்து நீதிபதி வேல்முருகன், “உங்களுக்கு மக்கள் வாக்களித்தது கட்டப்பஞ்சாயத்து செய்யவா? யார் இந்த அதிகாரம் கொடுத்தது?” என கேள்விகளால் துளைத்தெடுத்தார்.

ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய உத்தரவிட்டார்.

அதன்படி நீதிமன்ற வளாகத்திலேயே ஏடிஜிபி ஜெயராம் கைது செய்யப்பட்டார். முதலில் நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக காவல்துறை சீருடையில் வந்திருந்த ஏடிஜிபி ஜெயராம், நீதிபதியின் உத்தரவை தொடர்ந்து  சாதாரண உடையை மாற்றிக்கொண்டார்.

அதன்பின், நேற்று மாலை நீதிமன்றத்தில் இருந்து போலீஸ் வாகனத்தில், திருத்தணி காவல் உட்கோட்டம் பகுதியில் உள்ள திருவாலங்காடு காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அவரிடம் திருவள்ளூர் டிஎஸ்பி தமிழரசி தலைமையில் திருத்தணி டிஎஸ்பி கந்தன், செங்கல்பட்டு டிஎஸ்பி புகழேந்தி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

இதுதொடர்பாக போலீஸ் வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது, “ஜூன் 17ஆம் இரவு சுமார் 11.30 மணிக்கு திருவாலங்காடு காவல்நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டார். டிஎஸ்பி தமிழரசியும், டிஎஸ்பி புகழேந்தியும் மாறி மாறி ஜெயராமிடம் விசாரித்தனர்.

உங்கள் பெயர், என்ன ஊர் போன்ற வழக்கமான கேள்விகளை கேட்டுவிட்டு, வழக்கு தொடர்பான கேள்விகள் ஆரம்பித்தனர்.

சிறுவன் இந்திரசந்த் கடத்தல் வழக்கில் உங்களுக்கு தொடர்புள்ளதாக சொல்கிறார்களே?

எனக்கு எந்த விதமான தொடர்பும் இல்லை.

உங்கள் காரை குற்றச்சாட்டுக்கு உள்ளான மகேஸ்வரி எப்படி பயன்படுத்தினார்?

கோயிலுக்கு போவதாக சொல்லி கார் கேட்டார். அதனால் கொடுத்தேன். இப்படி மிஸ் யூஸ் செய்வார் என்று எனக்கு தெரியாது.

இதற்கு முன் மகேஸ்வரிக்கு காரை கொடுத்திருக்கிறீர்களா?

கோயிலுக்கு போவதற்காக கார் கேட்டதால் இரண்டு மூன்று முறை கொடுத்திருக்கிறேன். பிறகு நல்ல முறையில் கொண்டு வந்து கொடுத்துவிடுவார். அந்த நம்பிக்கையில் தான் இந்த முறையும் கொடுத்தேன்.

மகேஸ்வரியை உங்களுக்கு எப்படி தெரியும்? எப்படி பழக்கம்?

அவர் ஒரு ஆன்மீகவாதி… பவுர்ணமிதோறும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு போவார். மதுரை அருகே உள்ள கருப்பசாமி கோயிலுக்கும் அடிக்கடி வருவார். அவர் அருள் வாக்கும் சொல்லுவார். முக்கியமானவர்கள் கேட்டால் கருங்காலி மாலை செய்து கொடுப்பார். அப்படி, கோயிலுக்கு போன போதும், கருங்காலி மாலை வாங்க சென்ற போதும் தான் அவருடன் பழக்கம் ஏற்பட்டது என்று ஜெயராம் பதிலளித்தார்.

இப்படியாக இன்று அதிகாலை 2 மணி வரையில் ஜெயராமிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன்பிறகு அவரை ஓய்வெடுக்க சொன்னார்கள். தொடர்ந்து டிஎஸ்பி தலைமையில் அவரை போலீசார் கண்காணித்தனர்.

ஆனால் ஏடிஜிபி தூங்கவில்லை. ஒரு ஏடிஜிபியை டிஎஸ்பி ரேங்க் அதிகாரிகள் விசாரித்ததால் அவர் மனகவலையோடு காணப்பட்டார். காலை விடிந்ததும் ஒரு டீ சாப்பிட்டார்.

இதையடுத்து டிஜிபி அலுவலகத்தில் இருந்து ஒரு போலீஸ் வந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரியிடம், சஸ்பெண்ட் ஆர்டர் எடுத்து வந்துள்ளேன்… அதை ஜெயராமிடம் கொடுக்க வேண்டும் என்றார்.

இதையடுத்து, சேரில் அமர்ந்திருந்த ஏடிஜிபி ஜெயராமிடம், ஐயா, உள்துறையில் இருந்து சஸ்பெண்ட் ஆர்டர் கொடுத்திருக்கிறார்கள் என்று கூறி அதன் நகலை அந்த அதிகாரி கொடுத்தார்.

அதை பார்த்ததும் ஏடிஜிபி ஜெயராம் கண்கலங்கினார். அவரிடம் சஸ்பெண்ட் ஆர்டர் நகலை வாங்கிகொண்டதற்கான கையெழுத்து பெற்றுக்கொண்டு சென்றார் அந்த போலீஸ்.

இதையடுத்து ஏடிஜிபி ஜெயராமே, ரிமாண்டுக்கு போகணுமா? எப்போது போகணும் என்று கேட்டார். அங்கிருந்த அதிகாரிகள் தகவல் வந்ததும் சொல்கிறோம் என்றனர்.

இதுதான் நேற்றிரவு முதல் இன்று காலை வரை நடந்தது” என்கிறார்கள்.

இந்த சூழலில், ஏடிஜிபி ஜெயராம் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். அவரது மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் நாளை அவசரமாக விசாரிக்கவுள்ளது. dsp tamilarasi investigate adgp jayaram

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share